Published : 24 Mar 2025 12:25 AM
Last Updated : 24 Mar 2025 12:25 AM
அரசுப் பள்ளிகளில் உள்ள எஸ்எம்சி குழுக்களின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) செயல்பட்டு வருகின்றன. பள்ளி மற்றும் மாணவர்களின் மேம்பாட்டுக்காக அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் பெற்றோர், தலைமை ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதி, தன்னார்வலர்கள், கல்வியாளர்கள் இடம் பெற்றிருப்பார்கள். இந்தக் குழு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாக கட்டமைக்கப்படும். அந்தவகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய குழுக்கள் கட்டமைக்கப்பட்டன. இதையடுத்து எஸ்எம்சி கூட்டங்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு பள்ளி வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பள்ளி மேலாண்மைக் குழுவின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, எஸ்எம்சி குழு உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை மற்றும் லெட்டர் பேடை(letter pad) பள்ளி அளவிலேயே தயார் செய்து வழங்க வேண்டும். இதற்கான மாதிரி வடிவம் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய வழிமுறைகளை பின்பற்றி செயல்பட தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை வாயிலாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment