Published : 20 Mar 2025 08:51 PM
Last Updated : 20 Mar 2025 08:51 PM
சென்னை: ‘செட்’ தகுதித் தேர்வுக்கு முன்பு வெளியிடப்பட்ட உத்தேச விடைக் குறிப்புகள் திரும்பப் பெறப்படுவதாகவும், புதிய விடைக் குறிப்பும், விடைத்தாள் நகலும் தற்போது வெளியிடப்பட்டிருப்பதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் திடீரென அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ்.ஜெயந்தி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் மாநில தகுதித்தேர்வு (செட்) மார்ச் 6 முதல் 9-ம் தேதி வரை நடத்தப்பட்டு உத்தேச விடைக்குறிப்பு மார்ச் 13-ம் தேதி வெளியிடப்பட்டது. உத்தேச விடைகள் மீது தேர்வர்கள் இணையவழியில் ஆட்சேபணை செய்யவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
உத்தேச விடைகள் தொடர்பாக தேர்வர்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் குழுக்கள் அமைக்கப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் ஏற்கெனவே வெளியிடப்பட்ட உத்தேச விடைக்குறிப்பு தொழில்நுட்ப பிழை காரணமாக திரும்பபப் பெறப்படுகிறது. தற்போது மீண்டும் உத்தேச விடைக்குறிப்புகளும், தேர்வர்களின் விடைத்தாளும் (ரெஸ்பான்ஸ் ஷீட்) ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இதை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். புதிய உத்தேச விடைகள் மீதான ஆட்சேபணைகளை இணையவழியில் மார்ச் 27 மாலை 6 மணி வரை தெரிவிக்கலாம். பாடவல்லுநர்களின் முடிவே இறுதியானது, என்று அவர் கூறியுள்ளார். ‘செட்’ தேர்வில் இயற்பியல், வேதியியல் உள்பட பல்வேறு பாடங்களுக்கான உத்தேச விடைகள் அதிக எண்ணிக்கையில் தவறாக இருந்ததாக தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மீது குற்றம்சாட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment