Published : 21 Oct 2024 07:02 AM
Last Updated : 21 Oct 2024 07:02 AM

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு சென்னையில் இன்று கலந்தாய்வு தொடங்குகிறது

சென்னை: சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று தொடங்குகிறது. சிறப்பு பிரிவினர் மற்றும் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது. பொதுப் பிரிவு கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.

தமிழகத்தின் இந்திய மருத்துவம் - ஓமியோபதி துறையின்கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவ கல்லூரி, யுனானி மருத்துவ கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவ கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவ கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவ கல்லூரி ஆகியவை உள்ளன.

இந்த 5 அரசுக் கல்லூரிகளில் உள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் வழங்கப்படுகின்றன. எஞ்சியுள்ள 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதேபோல, 30 தனியார் கல்லூரிகளில் உள்ள 1,980 இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. எஞ்சியுள்ள இடங்களில் மாநில அரசுக்கு 65 சதவீதம், நிர்வாக ஒதுக் கீட்டுக்கு 35 சதவீதம் உள்ளன.

அரசு ஒதுக்கீடு இடங்கள், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது. அரசு கல்லூரிகளின் 15 சதவீத இடங்களுக்கு மட்டும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்துகிறது.

சித்தா (பிஎஸ்எம்எஸ்), ஆயுர்வேதா (பிஏஎம்எஸ்), யுனானி (பியுஎம்எஸ்), ஓமியோபதி (பிஎச்எம்எஸ்) ஆகிய பட்டப் படிப்புகளுக்கு 2024-25-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியான மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த படிப்புகளுக்கான கலந்தாய்வு அக்டோபர் 17-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டு அக்டோபர் 21-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை அரும்பாக்கம் சித்தா மருத்துவமனை வளாகத்தில் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதல் நாளான இன்று மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் ஆகிய சிறப்பு பிரிவினர் மற்றும் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின்கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கலந்தாய்வு நடை பெற உள்ளது. சிறப்பு பிரிவில் 15 இடங்களும், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 97 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பொது பிரிவு கலந்தாய்வு: பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை (அக்.22) தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறும். இதுதொடர்பாக மேலும் விவரங்களை www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறை இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x