Published : 20 Oct 2024 07:04 AM
Last Updated : 20 Oct 2024 07:04 AM

அனைத்து அரசு பள்ளிகளிலும் அக்.25-ல் புதிய எஸ்எம்சி குழு கூட்டம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: அனைத்து அரசுப் பள்ளிகளிலும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பள்ளி மேலாண்மை குழுக்களுக்கான முதல் கூட்டம், அக்டோபர் 25-ம் தேதி நடைபெறவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 2024-26 கல்வியாண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளன. புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் விவரங்கள், பள்ளி வாரியாக எமிஸ் தளத்தில் 90 சதவீதம் பதிவு செய்யப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 10 சதவீத பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட எஸ்எம்சி குழுக்களுக்கான முதல் கூட்டம், அக்டோபர் 25-ம் தேதி பிற்பகல் 3 முதல் 4.30 மணி வரை பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும். புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். அதேபோல் அந்த உறுப்பினர்கள் இடம்பெறும் வகையில் வாட்ஸ்அப் குழுவை பள்ளி அளவில் தலைமை ஆசிரியர் உருவாக்க வேண்டும்.

முதல் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய பொருள் குறித்து உறுப்பினர்களுக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும். எஸ்எம்சி குழுக்களுக்கு வழிகாட்டுதல் வழங்க வேண்டும். தலைமைச் செயலர் தலைமையிலான மாநில கண்காணிப்பு குழு மற்றும் ஆட்சியர் தலைமையிலான மாவட்ட கண்காணிப்பு குழு குறித்து புதிய உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x