Published : 25 Sep 2024 05:00 AM
Last Updated : 25 Sep 2024 05:00 AM

சென்னை பல்கலை.யில் துணைவேந்தர் இன்றி நடந்த பட்டமளிப்பு விழா: 1 லட்சம் மாணவர்களுக்கு ஆளுநர் பட்டம் வழங்கினார்

சென்னை பல்கலைக்கழகத்தின் 166-வது பட்டமளிப்பு விழா அதன் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாணவி ஒருவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டம் வழங்கினார். உடன் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, துறை செயலர் பிரதீப் யாதவ், மும்பை ஹோமி பாபா தேசிய நிறுவனத்தின் வேந்தர் அனில் காகோட்கர் உள்ளிட்டோர். படம்: ம.பிரபு

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் 1 லட்சத்து 7,821 மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் 166-வது பட்டமளிப்பு விழாஅதன் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். இணைவேந்தரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான க.பொன்முடி முன்னிலை வகித்தார். இந்த விழாவில் 2022-23, 2023-24-ம் கல்வியாண்டுகளில் படித்து முடித்த சென்னை பல்கலைக்கழக துறைசார்ந்த 1,404 பேர், இணைப்புக் கல்லூரிகளை சேர்ந்த 89,053 பேர், தொலைதூரக் கல்வி நிறுவனத்தை சேர்ந்த 16,263 பேர், ஆராய்ச்சி படிப்பை முடித்த 70 பேர் என மொத்தம் ஒரு லட்சத்து 7,821 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

அவற்றில் 1,031 பேருக்கு ஆளுநர் ரவி மூலம் நேரடியாகவும், மீதமுள்ள மாணவர்களுக்கு அந்தந்த கல்லூரிகள் வாயிலாகவும் பட்டங்கள் வழங்கப்பட்டன. இதற்கிடையே நேரடியாக பட்டங்கள் பெற்றவர்களில் 78 வயதை பூர்த்தி செய்த தங்கமணி, ஓய்வுபெற்ற காவல் உயர் அதிகாரி ஜாங்கிட், ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏவும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன் ஆகியோரும் பிஎச்டி பட்டம் பெற்றனர்.

தேசிய அணுசக்தி கழகத்தின் முன்னாள் தலைவரும், மும்பை ஹோமி பாபா தேசிய நிறுவனத்தின் வேந்தருமான அனில் காகோட்கர் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது, ‘‘உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. வளர்ச்சியின் அடிப்படையில் நாம் கணிசமான முன்னேற்றம் அடைந்து இருப்பதுடன், நாட்டின் பொருளாதாரமும் வேகமாக வளர்கிறது. ​​தற்போது 5-வது இடத்தில் உள்ள நமது பொருளாதாரம் இன்னும் 10 ஆண்டுகளில் 3-ம் இடத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், சராசரி இந்தியரின் தனிநபர் வருமானம் உலகளவில் 140-வது இடத்தில் உள்ளது.

சராசரி இந்தியரின் வாழ்க்கைத் தரம் வளர்ந்த நாடுகளில் உள்ள தனிநபர்களின் வாழ்க்கைத் தரத்துக்கு இணையாக உயர வேண்டும். இதற்கு நமது தனிநபர் வருமானம் சுமார் 7 மடங்கு அதிகரிக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

விழாவில் சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலை, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சென்னை பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் இல்லாமல் நடைபெறும் முதல் பட்டமளிப்பு விழா இதுவாகும். ஒருங்கிணைப்பு குழுவே தற்போதைய பல்கலைக்கழக நிர்வாகத்தை கவனிக்கிறது.

புறக்கணிக்காத பொன்முடி: துணைவேந்தர்கள் நியமனம் உட்பட உயர்கல்வித் துறை சார்ந்த விவகாரங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளுக்கு அமைச்சர் பொன்முடி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதன் காரணமாக ஆளுநர் ரவி கலந்து கொள்ளும் பட்டமளிப்பு விழாவை அவர் புறக்கணித்து வந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பங்கேற்றதுடன், நிகழ்ச்சி முடியும் வரை ஆளுநர் அருகிலேயே இருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x