Published : 04 Sep 2024 05:05 AM
Last Updated : 04 Sep 2024 05:05 AM

பிளஸ் 2 பொது தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பெயர் பட்டியல் தயாரிப்பு: திருத்தங்கள் மேற்கொள்ள தேர்வு துறை அவகாசம்

கோப்புப் படம்

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியலில் உள்ள திருத்தங்களை செப்டம்பர் 10-ம் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும் என தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் ந.லதா, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2024-25) பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல், கடந்த ஆண்டு 11-ம்வகுப்பு பொதுத் தேர்வு எழுதியவர்களின் விவரங்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட உள்ளது. இதற்கான தரவுகள் எமிஸ் வலைதளத்தில் இருந்து பயன்படுத்தப்பட இருக்கிறது. எனவே, அதன் விவரங்களை அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் சரிபார்த்து உறுதிசெய்ய வேண்டும்.

அதன்படி, பள்ளி தலைமை ஆசிரியர்கள், தேர்வுத் துறையின் இணையதளத்தில் சென்று (www.dge.tn.gov.in) பிளஸ் 2 மாணவர்களின் தகவல்கள் அடங்கிய பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அதில் மாணவரின் பெயர் (தமிழ்,ஆங்கிலம்), புகைப்படம், பிறந்ததேதி ஆகியவற்றில் ஏதேனும் திருத்தம் இருப்பின் அதன் விவரங்களை பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகலுடன் இணைத்து செப்டம்பர் 10-ம் தேதிக்குள் மாவட்ட தேர்வுத் துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அடிப்படையில் மட்டுமே திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

அதேநேரம், பெயர் மாற்றம் செய்த மாணவர்கள் அரசிதழ் நகலை இணைத்து அனுப்பலாம். பெயர் பட்டியலில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை தலைமை ஆசிரியர்கள் சரியாக விவரித்து அனுப்ப வேண்டும். அதேபோல், பட்டியலில் இருந்து ஏதேனும் மாணவரின் பெயரை நீக்க வேண்டுமெனில் முதன்மை கல்வி அலுவலரின் ஒப்புதல் பெற வேண்டும். எந்த காரணம் கொண்டும் முன் அனுமதியின்றி நீண்டகாலம் விடுப்பில் உள்ள அல்லது மாற்றுச் சான்றிதழ் பெறாத மாணவர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கக் கூடாது. இதுகுறித்து அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

இதேபோல், 10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான பெயர் பட்டியலும் எமிஸ் வலைதளம் வழியாக தயாரிக்கப்பட உள்ளது. எனவே, அவற்றில் ஏதும் திருத்தம் இருப்பின்செப்டம்பர் 18-ம் தேதிக்குள் சரிசெய்து அனுப்ப வேண்டும் எனவும்தேர்வுத் துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x