‘களஞ்சியம்’ செயலியில் விடுப்பு விவரம் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

‘களஞ்சியம்’ செயலியில் விடுப்பு விவரம் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

Published on

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் விடுப்பு விவரங்களை ‘களஞ்சியம்’ செயலி வாயிலாக மட்டுமே பதிவு செய்ய வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இன்று (செப்.3) அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், “தமிழகத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இனி வரும் நாட்களில் விடுப்பு சார்ந்த விவரங்களை ‘களஞ்சியம்’ என்ற புதிய செயலி வாயிலாக உள்ளீடு செய்து உரிய அலுவலருக்கு அனுப்ப வேண்டுமென கரூவூலக கணக்கு ஆணையரால் கடிதம் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்து அலுவலகங்கள், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சார்நிலை அலுவலகங்களில் பணியாற்றி வரும் அனைத்து வகை ஆசிரியர்கள், பணியாளர்கள் நடப்பு செப்டம்பர் 1-ம் தேதி முதல் எடுக்கும் விடுப்புக்கு இந்த செயலி வாயிலாக மட்டுமே அனுமதி பெற முடியும்.

இந்த செயலியில் சம்பந்தப்பட்ட பள்ளி, விடுப்புக்கு விண்ணப்பிப்பவர், அதனை பரிசீலனை செய்பவர், ஒப்புதல் வழங்கும் அதிகாரி என நிர்ணயம் செய்து அதற்காக குழுவை உருவாக்கி விடுப்புகளுக்கான அனுமதியை பெற்று கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதனுடன், இந்தாண்டில் இதுவரை விடுப்பு எடுத்த நபர்களின் விவரங்களையும் இந்த செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்,” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in