Published : 02 Sep 2024 07:33 AM
Last Updated : 02 Sep 2024 07:33 AM

7.5% உள்ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்ற அரசு பள்ளி மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பு: சில தனியார் கல்லூரிகள் மீது புகார்

சென்னை: தமிழகத்தில் பொறியியல், மருத்துவம், சட்டம் உட்பட தொழிற்கல்வி படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தை அரசே செலுத்திவிடுகிறது. இதனால் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.

இந்நிலையில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்ற மாணவர்களிடம் சில தனியார் பொறியியல் கல்லூரிகள் கூடுதல் கட்டணத்தை செலுத்த வற்புறுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதன்படி சிவகாசியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சேரச் சென்ற அரசுப் பள்ளி மாணவரிடம் விடுதிக் கட்டணமாக ரூ.20 ஆயிரம் செலுத்த வேண்டுமென கல்லூரி நிர்வாகம் வற்புறுத்தும் ஆடியோ சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகிறது. இதுதவிர சில கல்லூரிகள் புத்தகம், சிறப்புப் பயிற்சி, ஆய்வக உபகரணங்கள் என வெவ்வேறு பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் வைக்கப்படுகின்றன.

இதுகுறித்து பெற்றோர் சிலர் கூறும்போது, ‘‘தமிழகத்தில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாதுஎன்று தமிழக அரசு தொடர்ந்து கூறிவருகிறது. ஆனாலும், சில தனியார் பொறியியல் கல்லூரிகள் அரசின் உத்தரவை மதிக்காமல் செயல்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

மறுபுறம் தமிழக அரசு தரும் கல்விக்கட்டணம் போதுமானதாக இல்லை. அதை முறையாக வழங்கினால் நாங்கள் ஏன் மாணவர்களிடம் கூடுதலாக வசூலிக்கப் போகிறோம் என தனியார் கல்லூரிகள் தரப்பில் விளக்கம் தருவதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x