Last Updated : 24 Aug, 2024 04:11 PM

 

Published : 24 Aug 2024 04:11 PM
Last Updated : 24 Aug 2024 04:11 PM

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடந்து முடிந்த இரண்டு வாரத்தில், அதன் முடிவுகளை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் வெளியிட்டுள்ளது. சில தினங்களில் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளன.

இந்தியா முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தேர்வில் தகுதிப் பெறுவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நீட் தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது.

அதன்படி, எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கு 2024-25-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 185 நகரங்களில் 500 மையங்களில் கடந்த 11-ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் எம்பிபிஎஸ் முடித்த சுமார் 25 ஆயிரம் மருத்துவர்கள் உட்பட நாடு முழுவதும் 2.3 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர். முறைகேடுகளை தடுக்க ஏற்கெனவே திட்டமிட்டப்படி காலை, மாலை என இரு பிரிவுகளாக தேர்வுகள் நடைபெற்றது.

அதன்படி, 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மூன்றரை மணி நேரம் நடந்த தேர்வில் 50 சதவீதம் பேரும், பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 7 மணி வரை மூன்றரை மணி நேரம் நடந்த தேர்வில் மீதமுள்ள 50 சதவீத பேரும் பங்கேற்றனர். காலை மற்றும் மாலையில் தேர்வு எழுதிய இருதரப்பினருக்கும் மாறுபட்ட வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. மொத்தம் 800 மதிப்பெண்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தேர்வில் பயோகெமிஸ்ட்ரி, அனாடமி, காது மூக்கு தொண்டை (இஎன்டி), மகப்பேறு - மகளிர் நலம், குழந்தை மருத்துவம், கண் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் 200 கேள்விகள் கேட்கப்பட்டன.

ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் வழங்கப்படும். தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் (நெகட்டிவ்) குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக தேர்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளை https://www.natboard.edu.in/ ஆகிய என்ற இணையதளத்தில் தேசிய தேர்வுகள் வாரியம் (என்டிஏ) நேற்று இரவு வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு நீட் தேர்வு முடிவுகள் 17 நாட்களில் வெளியிடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இரண்டு வாரத்தில் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சில தினங்களில் கலந்தாய்வு அறிவிப்பு: நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் இடங்கள் மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் இடங்களுக்கு மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) www.mcc.nic.in என்ற இணையதளத்தில் கலந்தாய்வு நடத்துகிறது.

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 50 சதவீத இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாநில அரசுகள் கலந்தாய்வு நடத்தி வருகிறது. அகில இந்திய கலந்தாய்வு மற்றும் மாநில அரசு கலந்தாய்வு குறித்த அறிவிப்பு அடுத்த சில தினங்களில் வெளியாகவுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x