Published : 22 Aug 2024 04:34 AM
Last Updated : 22 Aug 2024 04:34 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு சிறப்பு பிரிவு, அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு: சென்னையில் இன்று நேரடியாக நடைபெறுகிறது

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியுள்ளது. சிறப்புபிரிவு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்றுநேரடியாக சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெறுகிறது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான பொதுகலந்தாய்வு https://tnmedicalselection.net/ என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

அரசு ஒதுக்கீட்டு தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 28,819 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு தரவரிசையில் இடம்பெற்றுள்ள 13,417 பேரும் ஆர்வமாக ஆன்லைனில் பதிவு செய்து கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்து வருகின்றனர்.

இந்த நடைமுறை வரும் 27-ம்தேதி மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. வரும் 28-ம் தேதிதரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். தற்காலிக இடஒதுக்கீடு விவரங்கள் 29-ம் தேதியும், இறுதி இடஒதுக்கீடு விவரங்கள் 30-ம் தேதியும் இணையதளத்தில் வெளியிடப்படும்.

30-ம் தேதி முதல் செப்.5-ம்தேதி நண்பகல் 12 மணி வரை இடஒதுக்கீட்டு ஆணையை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். செப்டம்பர் 5-ம் தேதி மாலை 5 மணிக்குள் இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும்.

இந்நிலையில், மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு, விளையாட்டு வீரர் ஆகியவர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு மற்றும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசுபன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நேரடியாக நடைபெறவுள்ளது.

7.5 சதவீத உள் இடஒதுக்கீடு: காலை 8 மணிக்கு விளையாட்டு வீரர், 8.30 மணிக்கு முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு, 9 மணிக்கு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறஉள்ளது.

நீட் ஹால் டிக்கெட், மதிப்பெண்கார்டு, 10, 11, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் மாணவ, மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். மேலும்விவரங்களுக்கு சுகாதாரத்துறை இணையதளங்களை பார்த்து அறிந்து கொள்ளலாம்.

தற்காலிக இடஒதுக்கீடு விவரங்கள் 29-ம் தேதியும், இறுதி இடஒதுக்கீடு விவரங்கள் 30-ம் தேதியும் இணையதளத்தில் வெளியிடப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x