Published : 21 Aug 2024 03:58 AM
Last Updated : 21 Aug 2024 03:58 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு ஆன்லைனில் இன்று தொடக்கம்: டெல்லி எய்ம்ஸை தேர்வு செய்தார் முதலிடம் பிடித்த ரஜனீஷ்

கோப்புப்படம்

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று ஆன்லைனில் தொடங்குகிறது. சிறப்பு பிரிவினர் மற்றும் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சென்னையில் நாளை நேரடியாக கலந்தாய்வு நடைபெறுகிறது.

தமிழகத்தில் 36 அரசு மருத்துவ கல்லூரிகள், சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி, 22 தனியார் மருத்துவ கல்லூரிகள், 3 அரசு பல் மருத்துவ கல்லூரிகள், 20 தனியார் பல் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில், அரசு கல்லூரிகளில் மொத்தம் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீதம், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது.

அரசு கல்லூரிகளில் எஞ்சிய 85 சதவீத இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 6,630 எம்பிபிஎஸ் இடங்கள், 1,683 பிடிஎஸ் இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதில், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 496 எம்பிபிஎஸ் இடங்கள், 126 பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதுதவிர, தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,719 எம்பிபிஎஸ் இடங்கள், 430 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.

ஒரு இடத்துக்கு 4 பேர் போட்டி: மாணவர் தரவரிசை பட்டியல் கடந்த 19-ம் தேதி வெளியிடப்பட் டது. இதில், அரசு ஒதுக்கீட்டு இடங்கள் பிரிவில் 28,819 பேர், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு பிரிவில் 3,683 பேர், நிர்வாக ஒதுக்கீடு பிரிவில் 13,417 பேர் இடம்பெற்றுள்ளனர். அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 10,462 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ள நிலையில் தரவரிசை பட்டியலில் 42,236 மாணவ, மாணவிகள் இடம்பெற்று உள்ளனர். இதன்மூலம் ஒரு இடத்துக்கு 4 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு https://tnmedical selection.net என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் இன்று தொடங்குகிறது.

அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு பிரிவில் தரவரிசை பட்டியலில் உள்ளவர்கள் இன்று காலை 10 மணி முதல் 27-ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்து, கட்டணம் செலுத்தி, இடங்களை தேர்வு செய்யலாம். 28-ம் தேதி தரவரிசை பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். தற்காலிக ஒதுக்கீடு விவரங்கள் 29-ம் தேதியும், இறுதி ஒதுக்கீடு விவரங்கள் 30-ம் தேதியும் இணையதளத்தில் வெளியிடப்படும். ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 5-ம் தேதி நண்பகல் 12 மணி வரை இடங்கள் ஒதுக்கீட்டு ஆணையை இணையதளத்தில் இருந்து பதி விறக்கம் செய்துகொள்ளலாம். ஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் செப்டம்பர் 5-ம் தேதி மாலை 5 மணிக்குள் சேர வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் ஆகிய சிறப்பு பிரிவினர் மற்றும் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நாளை (ஆகஸ்ட் 22) சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நேரடியாக நடைபெற உள்ளது. இதுபற்றி மேலும் விவரங்களை சுகாதாரத் துறை இணையதளங்களில் அறியலாம்.

இதற்கிடையே, நீட் தேர்வில் 720-க்கு 720 மதிப்பெண் எடுத்து அகில இந்திய அளவில் முதல் இடம் பிடித்த நாமக்கல் பள்ளி மாணவர் பி.ரஜனீஷ், தமிழக அரசின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்திருந்தார். இவர் அகில இந்திய கலந்தாய்வில் பங்கேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியை தேர்வு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆக.23-ல் அகில இந்திய கலந்தாய்வு முடிவு: நாடு முழுவதும் அரசு மருத்துவ, பல் மருத்துவ கல்லூரிகளில்இருந்து 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. இந்த இடங்கள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர்,நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவ கலந்தாய்வு குழு (எம்சிசி) ஆன்லைனில் நடத்தி வருகிறது.

இந்நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2024-25கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முதல் சுற்று கலந்தாய்வு https://mcc.nic.in/ என்ற இணையதளத்தில் கடந்த 14-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இன்றும், நாளையும் தரவரிசை பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இடங்கள் ஒதுக்கீடு பெற்றவர்களின் விவரங்கள் 23-ம் தேதி வெளியிடப்பட உள்ளன. ஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் 24-ம் தேதி முதல் 29-ம் தேதிக்குள் சேர வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் 30, 31-ம் தேதிகளில் நடைபெறும்.

மொத்தம் 3 சுற்று கலந்தாய்வு மற்றும் காலியாக உள்ள இடங்களுக்கான சிறப்பு கலந்தாய்வு அக்டோபர் இறுதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x