Published : 19 Aug 2024 12:46 PM
Last Updated : 19 Aug 2024 12:46 PM

மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு; ஆக.21 கலந்தாய்வு தொடக்கம்

அமைச்சர் மா.சுப்பிரமணியம்

சென்னை: மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியம் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டார். ஆகஸ்ட் 21 ஆம் தேதி மருத்துவ தேர்வு குழு மூலமாக கலந்தாய்வு தொடங்க உள்ளது.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்தாண்டை விட இந்த ஆண்டு 150 மாணவர்கள் கூடுதலாக சேர வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் அன்னை மருத்துவக் கல்லூரியில் 50 மாணவர்களும், கன்னியாகுமரியில் உள்ள மெடிக்கல் மிஷன் அண்ட் ரிசர்ச் செண்டர் கல்லூரியில் 100 மாணவர்களும் என மொத்தம் 150 இடங்கள் கூடுதலாக கிடைக்கப் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளைப் பொறுத்தவரை 9,800 எம்பிபிஎஸ், 2150 பல் மருத்துவ இடங்கள் உள்ளன. இவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்குகிறது. இந்த இடங்களுக்கு 43 ஆயிரத்து 63 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகம் ஆகும். அரசுக் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில், 6,630 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. தொடர்ந்து, நாமக்கலைச் சேர்ந்த ரஜினிஷ் என்ற மாணவன் 720 மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பிடித்துள்ளார்.

அதேபோல அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 3,733 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவர்களில் 3683 மாணவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.இந்த இட ஒதுக்கீட்டில், 669 மதிப்பெண்களைப் பெற்று சென்னையைச் சேர்ந்த ரூபிகா முதலிடம் பெற்றுள்ளார். காயத்ரி இரண்டாவது இடமும், அனுஷ்யா மூன்றாவது இடமும், ரத்தீஸ் நான்காவது இடமும் பெற்றுள்ளனர்.

அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு, மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விளையாட்டு வீரர்கள் என 4 வகை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x