Published : 17 Aug 2024 03:43 PM
Last Updated : 17 Aug 2024 03:43 PM

17-வது சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா சாதனை!

பெய்ஜிங்: சீனாவின் பெய்ஜிங்கில் ஆகஸ்ட் 8 முதல் 16 வரை நடைபெற்ற சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகளின் 17-வது பதிப்பில் இந்திய மாணவர் அணி பல மதிப்புமிக்க பதக்கங்களை வென்றுள்ளது.

இது குறித்து புவி அறிவியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சீனாவின் பெய்ஜிங்கில் ஆகஸ்ட் 8 முதல் 16 வரை நடைபெற்ற சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகளின் 17-வது பதிப்பில் இந்திய மாணவர் அணி பல மதிப்புமிக்க பதக்கங்களை வென்றுள்ளது. குஜராத், கேரளா, சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த நான்கு மாணவர்களைக் கொண்ட இந்திய அணி, மூன்று போட்டி பிரிவுகளில் (தியரி அண்ட் பிராக்டிகல், எர்த் சிஸ்டம் ப்ராஜெக்ட் மற்றும் இன்டர்நேஷனல் டீம் ஃபைல்டு இன்வெஸ்டிகேஷன்) தலா மூன்று தங்கம் மற்றும் வெண்கலம் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளது.

மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், இந்திய குழுவினரைப் பாராட்டியதோடு, நாட்டிற்கு மதிப்புமிக்க கல்வி பெருமையை கொண்டு வந்ததற்காக பாராட்டுகளைத் தெரிவித்தார். "சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் என்பது புவி அறிவியல் அமைச்சகத்தின் ரீச்அவுட் (ஆராய்ச்சி, கல்வி, பயிற்சி மற்றும் அவுட்ரீச்) திட்டத்தின் கீழ் திறன்மிக்க மாணவர்களை மையமாகக் கொண்ட மிகவும் வெற்றிகரமான திட்டங்களில் ஒன்றாகும். நமது இளம் புவி அறிவியல் சாதனையாளர்களை நினைத்து நாம் பெருமிதம் கொள்கிறோம்" என்று இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் எம்.ரவிச்சந்திரன் வெற்றியாளர்களை வாழ்த்தினார்.

கனடாவின் கல்கரியில் நடந்த சர்வதேச புவி அறிவியல் கல்வி அமைப்பு கவுன்சில் கூட்டத்தில் 2003 இல் நிறுவப்பட்ட சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் அமைப்பு உலகெங்கிலும் உள்ள மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான வருடாந்திர போட்டியாகும். குழுப்பணி, ஒத்துழைப்பு, யோசனைகளைப் பரிமாறிக் கொள்ளுதல் மற்றும் போட்டி ஆகியவற்றின் மூலம் புவி அறிவியல் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியா 2007 முதல் இந்த அமைப்பில் பங்கேற்றுள்ளது. அதன் பத்தாவது பதிப்பை மைசூரில் நடத்தியது. இந்த ஆண்டு, 17 வது ஒலிம்பியாட்டில் 35 நாடுகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. அவற்றில் 32 அணிகள் இறுதிப் போட்டிக்கு வந்தன. தியரி அண்ட் பிராக்டிகல், எர்த் சயின்ஸ் ப்ராஜெக்ட், இன்டர்நேஷனல் டீம் ஃபீல்ட் இன்வெஸ்டிகேஷன், டேட்டா மைனிங் ஆகிய நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.

இந்திய மாணவர்களின் (9 முதல் 12 ஆம் வகுப்பு வரை) பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக, இந்தியா முழுவதும் பல்வேறு பள்ளிகளில் நடைபெறும் இந்திய தேசிய புவி அறிவியல் ஒலிம்பியாட் போட்டிக்கு மத்திய புவி அறிவியல் அமைச்சகம் ஆதரவளிக்கிறது. நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி அமைப்புகளுடன் இணைந்து இந்திய புவியியல் சங்கத்தால் ஆண்டுதோறும் இது எளிதாக்கப்படுகிறது.

மாணவர்களுக்கான மதிப்பீட்டிற்கான தலைப்புகளில் புவியியல், வானிலை அறிவியல், கடலியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் ஆகியவை அடங்கும். இந்திய தேசிய புவி அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகளில் சிறந்த செயல்திறன் கொண்ட பங்கேற்பாளர்கள் சர்வதேச ஒலிம்பியாட்டில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இது அமைச்சகத்தின் ஆதரவையும் பெறுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x