Published : 14 Aug 2024 05:06 AM
Last Updated : 14 Aug 2024 05:06 AM

தேசிய அளவில் சென்னை ஐஐடி முதலிடம்; பன்முக வளர்ச்சிக்கு கிடைத்த அங்கீகாரம்: இயக்குநர் வி.காமகோடி பெருமிதம்

சென்னை: என்ஐஆர்எஃப் தரவரிசையில் தேசியஅளவில் முதலிடம் பெற்றிருப்பது சென்னை ஐஐடியில் பன்முக வளர்ச்சிக்கு கிடைத்த அங்கீகாரம் என அதன் இயக்குநர் வி.காமகோடி பெருமிதத்துடன் கூறினார்.

மத்திய அரசு நேற்று முன்தினம்வெளியிட்ட உயர்கல்வி நிறுவனங்களின் தேசிய அளவிலான தரவரிசையில் (என்ஐஆர்எஃப்) சென்னைஐஐடி ஒட்டுமொத்த பிரிவில் தொடர்ந்து6-வது ஆண்டாக முதலிடத்தையும், பொறியியல் பிரிவில் தொடர்ந்து 9-வது ஆண்டாக முதலிடத்தையும் பிடித்தது. இந்த சாதனை தொடர்பாக சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

என்ஐஆர்எஃப் தரவரிசையில் தேசிய அளவில் எங்கள் நிறுவனம் முதலிடம் பெற்றிருப்பதற்கு பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், மத்திய-மாநில அரசுகள், ஆராய்ச்சி நிதி ஒதுக்கிய அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைவரும் காரணம். இந்த அங்கீகாரம் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. கடும் போட்டிக்கு மத்தியில்தான் இந்த சாதனையை எட்டியுள்ளோம். இதுசென்னை ஐஐடியில் பன்முக வளர்ச்சிக்கு கிடைத்த அங்கீகாரமாகும்.

அனைவருக்கும் உயர்தர தொழில்நுட்ப கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இணையவழியில் பிஎஸ் டேட்டா சயின்ஸ், பிஎஸ் எலெக்ட்ரானிக் சிஸ்டம் படிப்புகளை வழங்கி வருகிறோம். டேட்டா சயின்ஸ் படிப்பில் மட்டும் 30 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர். அவர்களில், பொருளாதார ரீதியில் பின்தங்கிய 5 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் ஐஐடி கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக நாட்டில் உள்ளஅனைத்து என்ஐடி-க்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். இதன்மூலம் ஒவ்வொரு என்ஐடியிலும் ஒவ்வொரு துறையிலும் சிறந்த 10 மாணவர்கள் தேர்வுசெய்யப்பட்டு அவர்கள் ஐஐடியில் ஓராண்டு படிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

250 அரசு பள்ளிகளுக்கு எலெக்ட்ரானிக்ஸ் கிட் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு பள்ளியில் 400 மாணவர்கள் வீதம் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு எலெக்ட்ரானிக் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி ஆகஸ்ட் மாதம் தொடங்கும்.

கடந்த 2 ஆண்டுகளில் செயற்கைநுண்ணறிவு தொழில்நுட்பம், மெடிக்கல் சயின்ஸ் படிப்புகளையும் புதிய துறைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். ஸ்டார்ட்-அப் 100என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது. ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் தொழில்முதலீடுகள் கொண்ட நிறுவனத்தை யூனிகார்ன் என்று அழைப்பார்கள். அந்த வகையில் ஆண்டுக்கு ஒரு யூனிகார்ன் நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளோம். இவ்வாறு காமகோடி கூறினார்.

முன்னதாக, தேசிய தரவரிசைவிதிமுறைகளை ஐஐடி என்ஐஆர்எஃப் தலைவர் ரஜினிஷ்குமார் எடுத்துரைத்தார். பதிவாளர் ஜேன் பிரசாத்,டீன் கே.முரளி உடனிருந்தனர்.

விரைவில் பிஎஸ்சி, பிஎட் படிப்பு அறிமுகம்: ஐஐடி இயக்குநர் காமகோடி கூறும்போது, ‘‘தரமான கணித ஆசிரியர்களை உருவாக்கும் நோக்கில் டாட்டா சமூக அறிவியல் நிறுவனத்துடன் இணைந்து விரைவில் ஒருங்கிணைந்த பிஎஸ்சி, பிஎட். படிப்பை அறிமுகப்படுத்த உள்ளோம்.

4 ஆண்டு காலம் கொண்ட இந்த படிப்பில் பிஎஸ்சி படிப்பு இணையவழியில் வழங்கப்படும். பிஎட். படிப்பு நேரடியாக படிக்கும் வகையில் அமைந்திருக்கும். பிஎஸ்சி படிப்பு கணித பாடத்திலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திலும் வழங்கப்படும். ஆண்டுக்கு 500 ஆசிரியர்களை உருவாக்க வேண்டும் என்பது எங்கள் திட்டம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x