Published : 11 Aug 2024 08:03 AM
Last Updated : 11 Aug 2024 08:03 AM

முதுநிலை மருத்துவ படிப்புக்கு இன்று நீட் தேர்வு: தமிழகத்தில் 25 ஆயிரம் பேர் உட்பட 2 லட்சம் பேர் எழுதுகின்றனர்

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 250-க்கும் மேற்பட்ட நகரங்களில் இன்று நடைபெறவுள்ளது. தமிழகத்தில் எம்பிபிஎஸ் முடித்த சுமார் 25 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.

இந்தியா முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளாமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தேர்வில் தகுதிப் பெறுவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நீட் தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது. நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது.

இந்த இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் இடங்கள் மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் இடங்களுக்கான கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வுக் குழு (எம்சிசி) ஆன்லைன் மூலம் நடத்துகிறது. அதேபோல், தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள 50 சதவீத இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்தி வருகிறது

அதன்படி 2024-25-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த ஜூன் 23-ம் தேதி நாடு முழுவதும் 250-க்கும் மேற்பட்ட நகரங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் எம்பிபிஎஸ் முடித்த சுமார் 25 ஆயிரம் மருத்துவர்கள் உட்பட நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் தேர்வுக்கு முந்தைய நாள் இரவு திடீரென முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

இதையடுத்து, தள்ளிவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11-ம் தேதி காலை, மதியம் என இரண்டு ஷிப்ட்களாக நடைபெறும் என்று தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் அறிவித்தது. ஆனால், தமிழகத்தை சேர்ந்த தேர்வர்களுக்கு, அவர்கள் கேட்டிருந்த 4 விருப்ப தேர்வு மையங்களை ஒதுக்காமல் 750 கிமீ முதல் 1,000 கிமீ தொலைவில் ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதையடுத்து தேர்வர்கள் கோரிய தேர்வு மையங்களில் ஒன்றை ஒதுக்க வேண்டும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. திண்டுக்கல் மார்க்சிஸ்ட் எம்.பி. சச்சிதானந்தம் இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்து மனு அளித்து வலியுறுத்தினார். இதன் தொடர்ச்சியாக தமிழக தேர்வர்களில் 75 சதவீதத்தினருக்கு சொந்த மாநிலத்திலேயே அவர்கள் கேட்ட தேர்வு மையங்களில் ஒன்றை தேர்வு வாரியம் மறு ஒதுக்கீடு செய்தது.

அதேநேரம், 25 சதவீத தேர்வர்களுக்கு 1,000 கிமீ தொலைவுக்கு அப்பால் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழகத்தின் தருமபுரி மாணவிக்கு ஜம்மு காஷ்மீரில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு திட்டமிட்டப்படி நாடு முழுவதும் இன்று நடைபெறவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x