Published : 07 Aug 2024 03:34 PM
Last Updated : 07 Aug 2024 03:34 PM

பச்சையப்பன் அறக்கட்டளை அறங்காவலர் தேர்தலை உடனே நடத்த வேண்டும்: பல்கலை. ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளை அறங்காவலர் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அத்துடன் அறக்கட்டளையின் இடைக்கால நிர்வாகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தமிழ்நாடு துணை தலைவர் பசுபதி இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களிடம் கூறியதாவது: பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் 6 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 6 உதவிபெறும் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. அறக்கட்டளைக்கு அறங்காவலர் தேர்தலை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது.

புதிய அறங்காவலர் குழு தேர்வு செய்யப்படுவது வரை நிர்வாகத்தை கவனித்துக்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதியை இடைக்கால நிர்வாகியாக நியமித்தது. ஆனால், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு 6 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அறங்காவலர் தேர்தல் நடத்தப்படவில்லை. செயலர் பதவியில் இருப்பவரின் பணிக்காலம் ஏற்கெனவே முடிந்துவிட்டது. ஆனால், விதிமுறைகளை மீறி தொடர்ந்து செயலர் பொறுப்பை அவர் கவனித்து வருகிறார்.

இத்தகைய சூழலில் புதிதாக 132 உதவி பேராசிரியர்களை நியமிப்பதற்கான முயற்சியில் இடைக்கால நிர்வாகம் இறங்கியுள்ளது. அறங்காவலர் குழுதான் பேராசிரியர்களை நியமிக்க முடியும். இடைக்கால நிர்வாகத்துக்கு அதற்கான அதிகாரமே கிடையாது. அறங்காவலர் தேர்தலை நடத்தும் பொறுப்பை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தால் 20 நாட்களில் வாக்காளர் பட்டியல் தயாரித்து தேர்தலை நடத்தி புதிய அறங்காவலர்களை தேர்வு செய்ய முடியும்.

செயலர் பதவியில் இருக்கும் துரைக்கண்ணுவால் பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர்களும், மாணவர்களும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பேராசிரியைகள் அவமரியாதைக்கு உள்ளாகின்றனர். கல்லூரி கல்வி இயக்குநர் பிறப்பிக்கும் எந்த உத்தரவையும் செயலர் கண்டுகொள்வதே இல்லை. விதிமுறைகளை மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

எனவே, தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்கு முறை சட்டத்தை பயன்படுத்தி தமிழக அரசு பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளை தன்வசம் எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போதைய இடைக்கால நிர்வாகத்தின் முறைகேடுகள் காரணமாக, இந்த அறக்கட்டளை எதற்காக ஏற்படுத்தப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவேற்ற முடியவில்லை.” என்று பசுபதி கூறினார்.

துணை தலைவர் சாந்தி கூறும்போது, பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்த தகுதியுள்ள கவுரவ விரிவுரையாளர்களை பணி நீக்கம் செய்துவிட்டு தகுதியில்லாத நபர்கள் கவுரவ விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். உதவி பேராசிரியர் பதவிக்கு முதுகலை பட்டப்படிப்புடன் பிஎச்டி அல்லது ஸ்லெட், நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே நியமிக்க முடியும். ஆனால், வெறும் முதுகலை படிப்பு படித்தவர்களை தற்போதைய செயலர் கவுரவ விரிவுரையாளர்களாக நியமித்துள்ளார். பேராசிரியைகளை மரியாதை குறைவாக நடத்துகிறார்” என்று சாந்தி கூறினார்.

மண்டல செயலர் ராஜா கூறுகையில், “ஒரு காலத்தில் பச்சைப்பன் கல்லூரியில் இடம் கிடைப்பது என்பது கடினமான விஷயம். ஆனால், நிர்வாககத்தின் கெடுபிடிகள் காரணமாக தற்போது மாணவர் சேர்க்கை 40 சதவீதமாக குறைந்து விட்டது. எனவே, உடனடியாக அறங்காவலர் தேர்தல் நடத்தி அக்குழுவிடம் கல்லூரி நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும்” என்று ராஜா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x