Last Updated : 12 Jul, 2024 05:04 PM

 

Published : 12 Jul 2024 05:04 PM
Last Updated : 12 Jul 2024 05:04 PM

நான் முதல்வன் திட்டத்தில் பயின்று என்ஐடி, ஐஐடியில் சேரும் மாணவர்கள்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப் படம்

சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று ஐஐடி, என்ஐடியில் மாணவர்கள் சேருவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டம், கடந்த 2022 மார்ச் 1-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த மாபெரும் திறன் மேம்பாட்டுக்கான திட்டமானது இரண்டு ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று, வேலை வாய்ப்புகளையும் பெற்று வருகின்றனர்.

மேலும், அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவ - மாணவியர் ஐஐடி, என்ஐடி போன்ற இந்தியாவின் முன்னணி தொழில்நுட்பக் கல்வி நிலையங்களில் கல்வி கற்க ஏதுவாக ஜெஇஇ நுழைவுத் தேர்வுக்கு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு, நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று ஐஐடி, என்ஐடி போன்ற முன்னணி கல்வி நிலையங்களில் சேர்க்கை பெற்று வருகின்றனர்.

இதையொட்டி முதல்வர் தனது சமூக வலைதள பக்கத்தில், "என்னருந் தமிழ்நாட்டின் கண் எல்லோரும் கல்வி கற்றுப் பன்னருங் கலை ஞானத்தால், பராக்கிரமத்தால், அன்பால், உன்னத இமய மலைபோல் ஓங்கிடும் கீர்த்தி எய்தி ‘நான் முதல்வன்’ என்று இயம்பக் கேட்டிடும் 'இந்நாள்!' ” என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x