Published : 21 Jun 2024 05:55 AM
Last Updated : 21 Jun 2024 05:55 AM

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட், ஜேஇஇ பயிற்சி வகுப்பு: வழிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வி துறை

சென்னை: அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி அனுப்பிய சுற்றறிக்கை:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்புமாணவர்களுக்கு நீட், ஜேஇஇ போன்ற போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள் அவர்கள் பயிலும் பள்ளி அளவில் நடத்தப்பட உள்ளன.இந்த போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள், மாதிரித் தேர்வுகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளை திட்டமிட்டு ஒருங்கிணைத்திட மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர், இயற்பியல், கணிதம், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொரு பாடத்துக்கும் 2 பாட வல்லுநர்கள் வீதம் 10 ஆசிரியர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும்.

இதில் அனுபவம் உள்ள ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும். மேலும், 11, 12-ம் வகுப்பு மாணவர்களில் போட்டித் தேர்வுகள் எழுத ஆர்வமுள்ள மாணவர்களின் பட்டியல் தயார்செய்யப்பட வேண்டும். இந்தபோட்டித் தேர்வுகளில் பங்கேற்கமாணவர்களை ஊக்கப்படுத்தலாம். ஆனால், கட்டாயப்படுத்தக் கூடாது.

இதுதவிர ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை - தாவரவியல், கணிதம், செவ்வாய் - இயற்பியல், புதன் - விலங்கியல், கணிதம், வியாழன் - வேதியியல், வெள்ளி - மீள்பார்வை ஆகிய பாடங்களை அடிப்படையாக வைத்து பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

அனைத்து வேலைநாட்களிலும் பாடவாரியாக மாலை 4 முதல் 5.15 மணி வரை பயிற்சி வகுப்புகள் கால அட்டவணைப்படி நடத்தப்பட வேண்டும். அதேபோல், பள்ளி அளவிலான தினசரி தேர்வுகள், ஒவ்வொரு மாதமும் 2 சனிக்கிழமைகள், முழு ஆண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு பயிற்சிஅளித்திட மாநில ஒருங்கிணைப்புக் குழு உதவி செய்யும். மேலும், பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகம் வழியாகவும் பயிற்சிகள் வழங்கப்படும்.

இந்த வழிகாட்டு நெறிமுறைகள்படி செயல்பட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x