Last Updated : 18 Jun, 2024 08:45 PM

 

Published : 18 Jun 2024 08:45 PM
Last Updated : 18 Jun 2024 08:45 PM

தமிழகத்தில் முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் பள்ளி மாணவர்களுக்கு இனிப்புப் பொங்கல்: அரசாணை வெளியீடு

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: பள்ளிகளில் முக்கிய தலைவர்களின் பிறந்த நாளில் இனி மதிய உணவுடன் சேர்த்து கூடுதலாக இனிப்பு பொங்கலும் வழங்கப்படும் என சமூக நலத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சத்துணவுத் திட்டத்தில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதனுடன் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டமும் தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் முக்கிய பிரமுகர்கள் பிறந்தநாளில் மதிய உணவுடன் கூடுதலாக இனிப்புப் பொங்கல் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் வெளியிட்ட அரசாணை விவரம்: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள், பிரமுகர்களின் பிறந்த நாளில் இனிப்புப் பொங்கல் மட்டும் தற்போது வழங்கப்படுகிறது. வழக்கமான மதிய உணவு வழங்கப்படுவதில்லை. இதை மாற்றி இனிமேல் மதிய உணவுடன் சேர்த்து, சர்க்கரைப் பொங்கலும் அளிக்கலாம் என்று சமூக நலத் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் மாணவர்களுக்கு முக்கிய தலைவர்களின் பிறந்த நாளில் மதிய உணவுடன் சேர்த்து இனிப்புப் பொங்கல் வழங்க அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக ஒரு மாணவருக்கு ரூ.2 ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் 42.71 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். இதற்கான செலவீனத்துக்காக ரூ.4.27 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x