Last Updated : 09 Jun, 2024 06:12 PM

 

Published : 09 Jun 2024 06:12 PM
Last Updated : 09 Jun 2024 06:12 PM

ஜேஇஇ பிரதானத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 48,248 மாணவர்கள் தேர்ச்சி

கோப்புப்படம்

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ பிரதானத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 48,248 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாடு முழுவதுள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு, பிரதானத்தேர்வு என 2 கட்டமாக நடத்தப்படும். அதன்படி நடப்பாண்டுக்கான ஜேஇஇ பிரதானத் தேர்வு கடந்த மே 26-ம் தேதி நடத்தப்பட்டது. இந்தாண்டு சென்னை ஐஐடி நடத்திய இந்த தேர்வை நாடு முழுவதும் ஒரு லட்சத்து 80,200 பேர் எழுதினர். அதற்கான முடிவுகள் https://jeeadv.ac.in/ என்ற இணையதளத்தில் இன்று வெளியாகின.

அதன்படி தேர்வெழுதியதில் 7,964 மாணவிகள் உட்பட மொத்தம் 48,248 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் டெல்லி ஐஐடி மண்டலப் பகுதியை சேர்ந்த மாணவர் வேத் லகோட்டி மொத்தமுள்ள 360-க்கு 355 மதிப்பெண் பெற்று தேசியளவில் முதலிடம் பெற்றுள்ளார். பெண்கள் பிரிவில் மாணவி த்விஜா தர்மேஷ்குமார் படேல் 322 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 2,465 மாணவர்கள் தேர்வெழுதியதில் 594 பேர் தேர்ச்சியடைந்து உள்ளனர்.

சென்னை ஐஐடி மண்டலத்தில் மட்டும் 11,180 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து நாடு முழுதுள்ள 23 ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. அதன் விவரங்களை மேற்கண்ட இணைய தளத்தில் அறியலாம் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x