Published : 07 Jun 2024 05:26 PM
Last Updated : 07 Jun 2024 05:26 PM

டிப்ளமோ முடித்தோருக்கான பிஇ, பிடெக் நேரடி 2-ம் ஆண்டு சேர்க்கை: ஆன்லைன் விண்ணப்ப பதிவு சனிக்கிழமை தொடக்கம்

சென்னை: பொறியியலில் டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் பிஎஸ்சி பட்டதாரிகள் பொறியியல் பட்டப்படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர நாளை (ஜூன் 8) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையர் கொ.வீரராகவ ராவ் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் குறிப்பிட்ட இடங்கள் 'லேட்ரல் என்ட்ரி' முறையில் நேரடி 2-ம் ஆண்டு சேர்க்கைக்கு ஒதுக்கப்படுகின்றன.

இந்த இடங்களில் பொறியியல் டிப்ளமோ படித்தவர்கள், கணிதத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்த பிஎஸ்சி பட்டதாரிகள் சேரலாம். அந்த வகையில், இந்த இடங்களில் 2024-2025-ம் கல்வி ஆண்டில் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாக மட்டும் வரவேற்கப்படுகின்றன. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 8-ம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி, ஜூலை 7-ம் தேதி முடிவடைகிறது.

இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் www.tnlea.com என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பித்து இணையதளத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ.300. இக்கட்டணத்தை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் வாயிலாக ஆன்லைனில் செலுத்திவிடலாம்.

எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிய 04565-224528, 04565-230801 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம், என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x