Last Updated : 01 Jun, 2024 06:40 PM

 

Published : 01 Jun 2024 06:40 PM
Last Updated : 01 Jun 2024 06:40 PM

வேளாண் பல்கலை.யில் ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை: இதுவரை 23,248 பேர் விண்ணப்பம்

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கைக்கு இதுவரை 23,248 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைப் பிரிவுக்கும் ஒரே விண்ணப்பம் வழியாக இளமறிவியல் சேர்க்கை நடைபெற உள்ளது. இக்கல்வியாண்டில் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 4 பட்டயப்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 6 இளமறிவியல் பாடப்பிரிவுகள் மற்றும் மூன்று தொழில்முறை பாடப்பிரிவுகள் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் (வேளாண்மை) மற்றும் இளமறிவியல் (தோட்டக்கலை) பாடப்பிரிவுகளுக்கு ஒருமித்த வகையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கு 5361 இடங்களுக்கும், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு 371 இடங்களுக்கும் மற்றும் வேளாண்மைப் பிரிவு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கும் 340 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டயப்படிப்புகளுக்கு 1290 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்.

ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கைக்கு கடந்த மே 7-ம் தேதி முதல் இணையதள வாயிலாக http://tnagfi.ucanapply.com விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 6-ம் தேதி கடைசி நாளாகும். இதில் மே 31-ம் தேதி வரை 23,248 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

மொத்தம் 5177 மாணாக்கர்கள் தங்கள் இளமறிவியல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க உள்ளனர். முழுமையாக பூர்த்தி செய்து பெறப்பட்ட 23,248 விண்ணப்பங்களில் 14,384 பேர் மாணவிகள் ஆவர். மாணவர்களுடைய எண்ணிக்கை 8,864 ஆகவும் உள்ளது. பட்டயப்படிப்புக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் (மே 31 வரை) 2,153 பெறப்பட்டுள்ளன.

மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய ugadmissions@tnau.ac.in என்ற மின்னஞ்சல் (email) மூலமாகவும் 9488635077, 9486425076 என்ற செல்போன் எண்களிலும் வார நாட்களில் காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x