Last Updated : 31 May, 2024 07:39 PM

 

Published : 31 May 2024 07:39 PM
Last Updated : 31 May 2024 07:39 PM

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு ஜூன் 3 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்! - முழு விவரம்

சென்னை: கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு வரும் 3-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு 53 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீராபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) 660 இடங்கள் இருக்கின்றன. இதில், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு இடங்கள் 63 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன. மீதம் தமிழகத்துக்கு 597 இடங்கள் உள்ளன.

திருவள்ளூர் மாவட்டம் கோடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 20 இடங்கள் இருக்கின்றன. இதில், உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 6 இடங்கள் மற்றும் பால்வளத் தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள் அகிய இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இதேபோல், ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப்படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது.

இந்நிலையில், பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2024 - 25-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in/ என்ற இணையதளத்தில் வரும் ஜூன் 3-ம் தேதி, காலை 10 மணி முதல் 21-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தகவல் தொகுப்பேடு, சேர்க்கை தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை மற்றும் இதர விவரங்களை இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினர் ஆகியோர்களுக்கான இட ஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விபரங்களையும் இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம். இந்த படிப்புகளுக்கு பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அரசு பள்ளி மாணர்களுக்கு 53 இடங்கள்: 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பில் 45 இடங்கள், உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப படிப்பில் 2 இடங்கள், கோழியின தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள் என மொத்தம் 53 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

வேலைவாய்ப்புகள்: கால்நடை மருத்துவப் படிப்பு படித்தால் அரசு கால்நடை மருத்துவமனைகள், பல்கலைக்கழகம், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், கால்நடை மற்றும் குதிரை பண்ணைகள், கோழி பண்ணை தொழில், கால்நடை உற்பத்தி பொருட்கள் (பால், முட்டை, இறைச்சி) சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன. அதேபோல் உணவு, பால்வளம், கோழியின தொழில்நுட்ப படிப்புகளை படித்தால் அரசு உணவு தரக்கட்டுப்பாட்டு அலுவலகம், பல்கலைக்கழகம், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், ஆவின் மற்றும் இதர பால் பதனிடும் தொழில் நிறுவனங்கள், உணவு பதனிடும் தொழில் நிறுவனங்கள், தானியம், பருப்பு, காய்கறி, பழங்கள், இறைச்சி, முட்டை, மீன் ஏற்றுமதி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x