Published : 27 May 2024 04:31 AM
Last Updated : 27 May 2024 04:31 AM

பள்ளி கல்வி திட்டங்கள் குறித்து ஆராய்ச்சி செய்ய நார்வே நாட்டு கல்வி அதிகாரிகளுக்கு அழைப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

சென்னை: தமிழக பள்ளிக் கல்வித் திட்டங்கள் குறித்து ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என நார்வே நாட்டின் கல்வித்துறை அதிகாரிகளுக்கு, அமைச்சர் அன்பில் மகேஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

உலகின் பிற நாடுகளில் உள்ள சிறந்த கல்வித் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதற்காக தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி டென்மார்க், சுவீடன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நார்வேயில் உள்ள மேற்கத்திய நார்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழக நூலகத்தை நேற்று பார்வையிட்டார்.

அப்போது அங்குள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் தலைமை நிர்வாகிகளிடம் கலந்துரையாடிய அவர், தொடர்ந்து நார்வே நாட்டின் ஆசிரியர்களை தமிழகத்துக்கு அழைத்து வந்தும், நமது ஆசிரியர்களை அந்நாட்டிற்கு அனுப்பியும், அறிவுசார் பரிமாற்றம் மேற்கொள்வதற்கான வரைவுத் திட்டம் ஒன்றையும் முன்வைத்தார். அத்திட்டத்துக்கான ஒப்புதலை பெறும் முயற்சிகளில் ஈடுபடுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பள்ளிக் கல்வித் திட்டங்கள் குறித்த புத்தகத்தை அவர்களிடம் வழங்கி, அத்திட்டங்கள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதையொட்டி தமிழகத்துக்கு வருகை தருமாறும் நார்வே அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x