Last Updated : 25 May, 2024 03:49 PM

 

Published : 25 May 2024 03:49 PM
Last Updated : 25 May 2024 03:49 PM

நலத்திட்ட பொருள்கள் வழங்கும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது: ஆசிரியர்களுக்கு அரசு அறிவுறுத்தல்

கோப்புப் படம்

சென்னை: பள்ளிகளில் நலத்திட்ட பொருள்கள் வழங்கும் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது என்று ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்; வரும் 2024-25-ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்டப் பொருள்கள் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தலைமைச் செயலர் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி நலத்திட்டப் பொருள்கள் விநியோக மையங்களில் இருந்து உரிய காலத்துக்குள் பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.இந்தக் கல்வியாண்டில் மாணவர்களுக்கு இரு கட்டங்களாக நலத்திட்ட பொருட்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முதற்கட்டமாக பாட நூல்கள், நோட்டுப் புத்தகம், புவியியல் வரைபடம் போன்ற பொருட்களை பள்ளி திறக்கும் நாளில் வழங்க வேண்டும்.

2-ம் கட்டமாக இதர நலத்திட்டப் பொருள்களை பெற்று விநியோக மையங்களில் சேமித்து வைத்து வரும் ஜூலை 15-ம் தேதிக்குள் வழங்க வேண்டும். அதேசமயம் நலத்திட்டப் பொருள்கள் வழங்க ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைப் பயன்படுத்தக் கூடாது. மாணவர்களுக்கான பொருள்கள் வழங்கப்பட்ட விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்தவுடன் பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி உடனே அனுப்பப்படும். எனவே, இதில் ஆசிரியர்கள் கவனமாக செயல்பட அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x