Published : 20 May 2024 07:39 PM
Last Updated : 20 May 2024 07:39 PM

தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அமல்: வலைதளத்தில் வரைவு பாடத்திட்டம் வெளியீடு

சென்னை: பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதல் ஆண்டை தொடர்ந்து 2-ம், 3-ம் ஆண்டு பாடத்திட்டமும் விரைவில் மாற்றப்படுகிறது. இதற்கான வரைவு பாடத்திட்டம் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 34 அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்குகள், 406 தனியார் சுயநிதி பாலிடெக்னிக்குகள் என மொத்தம் 491 பாலிடெக்னிக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான 3 ஆண்டு கால டிப்ளமா படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த டிப்ளமா படிப்புகளில், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேரலாம். அதேநேரத்தில், பிளஸ் 2 முடித்திருந்தால் ‘லேட்ரல் என்ட்ரி’ முறையில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர்ந்துவிடலாம்.

பொறியியலில் டிப்ளமா படிக்கும் மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனையும், தொழில்முனைவுத் திறனையும் மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் என உயர்கல்வித்துறை கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. அதன்படி, 2023-2024-ம் கல்வி ஆண்டில் முதல் ஆண்டு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, அந்த இரு ஆண்டுகளுக்கான வரைவு பாடத்திட்டத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தனது இணையதளத்தில் (www.dte.tn.gov.in) வெளியிட்டுள்ளது.

சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான வரைவு பாடத்திட்டம் தொடர்பான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகள் மே மாதம் 24-ம் தேதிக்குள் இணையவழியில் தெரிவிக்குமாறு மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையர் கொ.வீரராகவ ராவ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அக்கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அவர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x