Published : 15 Apr 2024 06:29 AM
Last Updated : 15 Apr 2024 06:29 AM

பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மை தேர்வு: முடிவுகள் ஏப்ரல் 25-ம் தேதி வெளியீடு

சென்னை: பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகள், திட்டமிட்டபடி ஏப்ரல் 25-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடைபெறும்.

ஜேஇஇ முதன்மைத் தேர்வானது, தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2024-25-ம் கல்வி ஆண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மைத் தேர்வு கடந்த ஜனவரி 24 முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடைபெற்றது.

இந்த தேர்வை 12.25 லட்சம் பேர் எழுதினர். அதன் முடிவுகள் பிப்ரவரி 12-ம் தேதி வெளியாகின. தொடர்ந்து ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வு ஏப்ரல் 4 முதல் 9-ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர்.

இறுதி விடைக்குறிப்பு: இதற்கிடையே தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை என்டிஏ ஏப்ரல் 12-ம் தேதி வெளியிட்டது. இதுசார்ந்து பெறப்பட்ட கருத்துருகள் அடிப்படையில் இறுதி விடைக்குறிப்பு அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளது.

அதன் பின்னர் விடைத்தாள் மதிப்பீடு, மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, ஏற்கெனவே அறிவித்தபடி தேர்வுமுடிவுகள் ஏப்ரல் 25-ம் தேதிவெளியிடப்படும். அவற்றை jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற என்டிஏ இணையதளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 69227700 என்ற தொலைபேசி எண் அல்லது jeemain@nta.ac.in மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x