Published : 30 Jan 2024 05:41 AM
Last Updated : 30 Jan 2024 05:41 AM

மருத்துவ படிப்புகளுக்கான ‘நெக்ஸ்ட்’ தேர்வு குறித்து கருத்துகள் தெரிவிக்கலாம்: தேசிய மருத்துவ ஆணையம் தகவல்

சென்னை: மருத்துவ படிப்புகளுக்கு ‘நெக்ஸ்ட்’ தேர்வை அமல்படுத்துவது குறித்து பிப்ரவரி 7-ம் தேதி வரை கருத்துகள் தெரிவிக்கலாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

எம்பிபிஎஸ் இறுதியாண்டு தேர்வு, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கான தகுதித் தேர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து ‘நெக்ஸ்ட்’ எனப்படும் தேசிய தகுதித் தேர்வை நடத்த தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) முடிவு செய்தது. மொத்தம் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட எம்பிபிஎஸ் படிப்பில் முதல் நான்கரைஆண்டுகள் முடித்த பின்னர்நெக்ஸ்ட் நிலை 1 தேர்வை எழுதிதேர்ச்சி பெற வேண்டும். அப்போதுதான் ஓராண்டு பயிற்சி மருத்துவராக பணியாற்ற முடியும்.

பயிற்சி மருத்துவராக ஓராண்டு பணியாற்றிய பின்னர் நெக்ஸ்ட் நிலை 2 தேர்வை எழுதி தேர்ச்சி பெறவேண்டும். அதன் பின்னரே, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேரவும், மருத்துவ சேவை ஆற்றவும் முடியும். அதேபோல், வெளிநாடுகளில் மருத்துவம் படித்து முடித்தவர்களுக்கு தகுதித் தேர்வுக்கு பதிலாக நெக்ஸ்ட் தேர்வு எழுத வேண்டும் என்று ஆணையம் தெரிவித்திருந்தது.

இதற்கு மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இந்த தேர்வு முறை யால் மாணவர்களின் பயிற்சி திறன் பாதிக்கப்படும் என்பதால் அத்திட்டத்தை கைவிடக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து, மறுஉத்தரவு வரும் வரை நெக்ஸ்ட்தேர்வு நடைமுறை ஒத்திவைக்கப் படுவதாக ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், நெக்ஸ்ட் தேர்வுக்கு தற்போது துறை சார்ந்தவர்களின் கருத்து கேட்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக என்எம்சியின் கொள்கைகள் மற்றும் ஒருங்கிணைப்பு துறை செயலர் கே.நிதி வெளியிட்ட அறிவிப்பில், “நெக்ஸ்ட் தேர்வை நடைமுறைப்படுத்துவது, ஆயத்தமாவது குறித்து ஆய்வு செய்ய மத்தியசுகாதாரத்துறை அமைச்சரின் ஒப்புதலுடன் சிறப்புக் குழு ஒன்றுஅமைக்கப்பட்டது. அந்த குழுவானது தற்போது நெக்ஸ்ட் தேர்வு குறித்து மருத்துவத் துறையினர் மற்றும் மக்களிடம் கருத்துகளை கேட்கிறது. வரும் பிப்ரவரி 7-ம் தேதி வரை அக்கருத்துகளை என்எம்சி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பலாம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x