Published : 03 Dec 2023 05:31 AM
Last Updated : 03 Dec 2023 05:31 AM

சென்னை பல்கலை.க்கு யுஜிசி முதல்தர அங்கீகாரம்: ரூ.100 கோடி வரை நிதியுதவி கிடைக்கும்

சென்னை: யுஜிசியின் முதல்தர அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனமாக சென்னை பல்கலைக்கழகம் தகுதி பெற்றுள்ளது.

நம் நாட்டில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரத்தைஅளவிடுவதற்காக அவற்றின் செயல்பாடுகளின் அடிப்படையில் தேசிய தர மதிப்பீடு அங்கீகாரக் குழுவால் (நாக்) தர மதிப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. கற்பித்தல், ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு, சமூகப் பொறுப்பு உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டு இந்த மதிப்பீட்டை ‘நாக்’ குழு வழங்குகிறது. அதிகபட்சமாக ஒரு கல்வி நிறுவனத்துக்கு ‘ஏ பிளஸ் பிளஸ்’ அங்கீகாரம் அளிக்கப்படும். அந்தவகையில் சென்னை பல்கலைக்கழகத்துக்கு ‘ஏ பிளஸ் பிளஸ்' என்ற முதல்தர அந்தஸ்து சமீபத்தில் வழங்கப்பட்டது.

இதற்காக சென்னை பல்கலைக்கழகத்தில் ‘நாக்’ அங்கீகாரக் குழுவினர் கடந்த ஆக.10, 11-ம் தேதிகளில் ஆய்வு நடத்தினர். அதன்படிசென்னை பல்கலை.க்கு மொத்த தர மதிப்பீட்டு சராசரியில் 4-க்கு3.59 மதிப்பெண் அளிக்கப்பட்டது. இது முந்தைய தர மதிப்பெண்ணை (3.32) விட அதிகமாகும். ‘நாக்’ அங்கீகாரம் மற்றும் யுஜிசி விதிகளின்படி சென்னை பல்கலைக்கழகம் தற்போது முதல் தர அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகமாக தகுதி பெற்றுள்ளது.

முதல்தர அங்கீகாரம் பெற்றசில மாநில கல்வி நிறுவனங்களில் சென்னை பல்கலைக்கழகமும்ஒன்று. இதன்மூலம் சென்னைபல்கலைக்கழகம் யுஜிசி முன் அனுமதியின்றி பட்டப்படிப்புக்கான திட்டங்களை வகுத்துக் கொள்ளலாம். மேலும், ரூ.100 கோடி வரையுஜிசி நிதியுதவியைப் பெற முடியும் என துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x