Published : 06 Oct 2023 06:10 AM
Last Updated : 06 Oct 2023 06:10 AM

விஐடி சென்னையில் ‘டெக்னோ விஐடி-23’ தொழில்நுட்ப திருவிழா தொடக்கம்: எதிர்காலத்தில் மனிதனை விண்ணுக்கு அனுப்ப திட்டம்

சென்னை விஐடி பல்கலை.யில் ‘டெக்னோ விஐடி-23’ விழாவை இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக இயக்குநர் ஜெயந்தி ராஜேஷ் தொடங்கி வைத்து மாணவர்கள் உருவாக்கிய ரோபோவிடம் உரையாடினார். உடன், விஐடி பல்கலை. துணைத் தலைவர் சேகர் விஸ்வநாதன், இணை துணை வேந்தர் காஞ்சனா பாஸ்கரன் உள்ளிட்டோர். படம்: எம்.முத்துகணேஷ்

வண்டலூர்: விஐடி சென்னையில் நேற்று தொடங்கிய ‘டெக்னோ விஐடி-23’ தொழில்நுட்ப திருவிழாவில் பங்கேற்ற யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மைய குழு இயக்குநர் ஜெயந்தி ராஜேஷ், எதிர்காலத்தில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

விஐடி சென்னையில் ‘டெக்னோ விஐடி-23’ (TECHNOVIT-23) என்ற தொழில்நுட்ப திருவிழாவின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோவின் கீழ் இயங்கும் யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தின் குழு இயக்குநர் ஜெயந்தி ராஜேஷ், கவுரவ விருந்தினராக வேர்ல்ட் லைன் குளோபல் நிறுவனத்தின் மனித வள மேலாண்மை மூத்த உதவி தலைவர் ஜோஷ் ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு ‘டெக்னோ விஐடி-23’யை தொடங்கி வைத்தனர்.

இதில் விஐடி துணை தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், விஐடி சென்னையின் இணை துணைவேந்தர் வி.எஸ். காஞ்சனா பாஸ்கரன், கூடுதல் பதிவாளர் பி.கே. மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் ஜெயந்தி ராஜேஷ் பேசும்போது, “இஸ்ரோ 34 நாடுகளுடன் இணைந்து இதுவரை 424 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. 260 திட்டங்கள் இதுவரை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் சந்திராயன்-3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா என்னும் செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. எதிர்காலத்தில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. நாட்டின் வளர்ச்சிக்காகவும், விண்வெளி சார்ந்த ஆய்வுக்காகவும் இஸ்ரோ தொடர்ந்து பணியாற்றி வருகிறது” என்றார்.

கவுரவ விருந்தினர் ஜோஷ் ராஜ் பேசும்போது, “இந்தியாவில் உள்ள அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைந்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றவாறு, மாணவர்கள் தங்களுடைய திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும். மாணவர்களின் திறனை வளர்ப்பதற்கான பணிகளை விஐடி சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. மாணவர்கள் 3 நாட்கள் நடைபெறும் டெக்னோ விஐடி என்ற தொழில்நுட்ப திருவிழாவில் பங்கேற்று பயன் பெற வேண்டும்” என்றார்.

தொழில்நுட்ப திருவிழாவின் முதல் நாளான நேற்று ட்ரோன் நிகழ்ச்சி, ரோபோ ஷோ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ரோபோக்கள் மனிதர்களைப் போல நடந்து, நடனமிட்டு பார்ப்பவரை வியக்கச் வைத்தன.

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட நாடு முழுவதும் இருந்து முன்னணி கல்வி நிறுவனங்கள் மற்றும் மலேசியா, கம்போடியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்கள் என முதல் நாளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் தொழில்நுட்ப நிகழ்வுகளை கண்டு ரசித்தனர். டெக்னோ விஐடி-23 அக். 7-ம் தேதியுடன் நிறைவடைகிறது. தொழில்நுட்பம் சார்ந்த இவ்விழாவில் 250-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x