Published : 04 Aug 2023 01:33 PM
Last Updated : 04 Aug 2023 01:33 PM

10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 - யுபிஎஸ்சி தேர்வு ஊக்கத்தொகை திட்டத்தில் பயன்பெறுவது எப்படி?

நான் முதல்வன் திட்டம்

சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் யுபிஎஸ்சி ஊக்கத்தொகைத் திட்டத்தை இளைஞர்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழக இளைஞர்கள் இந்திய ஆட்சிப் பணிக்கு அதிகம் தேர்வாக வேண்டும் என்று பல முன்முயற்சிகளை நமது அரசு எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக, நான் முதல்வன் போட்டித்தேர்வுகள் பிரிவு வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊக்கத்தொகைத் திட்டத்தை UPSC தேர்வுக்குத் தயாராகும் நம் இளைஞர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இளைய தமிழகம் உலகை வெல்லட்டும்!" என்று அவர் கூறியுள்ளார்.

திட்டம் என்ன? - நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது தமிழக இளைஞர்கள் மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் 2023-24-க்கான தமிழக அரசின் பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC), அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச்செய்து உதவும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் 1,000 சிவில் சர்வீசஸ் பயின்று வரும் மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படும். இது சமீப காலமாக UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெறும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் விகிதத்தை மாற்றியமைக்க தமிழக அரசால் எடுக்கப்பட்டிருக்கும் முயற்சியாகும்.

இதன்படி TNSDC, அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக UPSC முதல்நிலை தேர்வின் ஊக்கதொகைக்கான மதிப்பீட்டுத் தேர்வை 10.09.2023 அன்று நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் 7500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும்.

ஏற்கெனவே அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் கீழ் இயங்கி வரும் அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையங்களுக்கான (ஆர்.ஏ புரம் சென்னை, பாரதியார் பல்கலைக்கழகம் கோவை மற்றும் காமராஜர் பல்கலைக்கழகம் மதுரை) நுழைவுத் தேர்வும் இதில் ஒருங்கிணைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மதிப்பீட்டுத் தேர்வை எழுதி ஊக்கத்தொகை பெற விரும்பும் ஆர்வமுள்ள மாணவர்கள், https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விரிவான அறிவிக்கையைப் படித்து பார்த்து, 02.08.2023 அன்று முதல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 17.08.2023 ஆகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x