Published : 24 Jul 2023 05:29 AM
Last Updated : 24 Jul 2023 05:29 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் நாளை தொடக்கம்

கோப்புப்படம்

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் நாளை தொடங்குகிறது. சிறப்பு பிரிவு மற்றும் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நேரடியாக நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2023-24-ம்கல்வியாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ஆர்வமாக விண்ணப்பித்தனர்.

விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு பின்னர், தரவரிசைப் பட்டியல் கடந்த 16-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,856 பேர், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13,179 பேர் மற்றும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடங்களுக்கு 2,993 பேர் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 25-ம் தேதி (நாளை) ஆன்லைனில் தொடங்குகிறது.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் தேர்வுக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய சுகாதாரத்துறை இணையதளங்களில் ஜூலை 25-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. ஜூலை 25-ம் தேதி காலை 10 மணி முதல் வரும் 31-ம் தேதி மாலை 5 மணி வரை அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 1 முதல் 25,856 வரை (நீட் மதிப்பெண் 720 முதல் 107 வரை) இடம் பெற்றுள்ளவர்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 1 முதல் 13,179 வரை (நீட் மதிப்பெண் 715 முதல் 107 வரை) பதிவு செய்து, கட்டணம் செலுத்தி, இடங்களை தேர்வு செய்யலாம்.

ஆகஸ்ட் 1, 2-ம் தேதிகளில் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ஆகஸ்ட் 3-ம் தேதி இடஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும்.

ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் 8-ம் தேதி மாலை 5 மணி வரை இடஒதுக்கீட்டு ஆணையை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆகஸ்ட் 8-ம் தேதி மாலை 5 மணிக்குள் இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும். கட்டணம் உள்ளிட்ட விவரங்களை சுகாதார இணையதளங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளி, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு,விளையாட்டு வீரர்கள் ஆகியவர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு மற்றும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு இடங்களுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்னும் சில தினங்களில் சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேரடியாக நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 6,326 எம்பிபிஎஸ் இடங்கள், 1,768 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு 473 எம்பிபிஎஸ் இடங்கள், 133 பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் 1,509 எம்பிபிஎஸ் இடங்கள், 395 பிடிஎஸ் இடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x