Published : 20 Jul 2023 03:10 PM
Last Updated : 20 Jul 2023 03:10 PM

‘தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது’ - உயர் நீதிமன்றத்தில் விதிகளை விவரித்த தமிழக அரசு

சென்னை: தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கக் கூடாது என விதிகள் வகுக்கப்பட்டு உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் செம்பியம் ஜி.தேவராஜன் என்பவர் 2017-ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், சென்னை பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி கல்வித் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடத்தியதில், டான் போஸ்கோ பள்ளியில் கட்டண விதிமீறல் இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க, பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.தனியார் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கக்கூடாது என்று 2018-ம் ஆண்டு விதிகள் வகுக்கப்பட்டு உள்ளது. எனவே மனுதாரர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" என கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

டான் பாஸ்கோ பள்ளி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "மனுதாரரின் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. பள்ளிக்கும், மாணவர்களுக்கும் எவ்வித சம்பந்தமில்லாமல் மனுதாரர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று கோரியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதனை ஏற்று வழக்கின் விசாரணையை செப்டம்பர் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x