Published : 15 Jun 2024 03:24 PM
Last Updated : 15 Jun 2024 03:24 PM

போளூர் அருகே கார் விபத்து: திருவண்ணாமலை வந்த ஆந்திர பக்தர்கள் 3 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே விபத்தில் சிக்கி உருகுலைந்த கார்.

திருவண்ணாமலை: ஆந்திராவில் இருந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் வந்த கார் சனிக்கிழமை காலை புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் குண்டூரை அடுத்த பெண்குரைப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சசிதர்(39). இவர், தனது உறவினர்களுடன் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக சனிக்கிழமை காலை காரில் வந்தார். காரை, சசிதர் ஓட்டி வந்தார். போளூரை அடுத்துள்ள வசூல் கிராமம் அருகே, திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் கார் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் உருக்குலைந்தது.

இந்த விபத்தில் சசிதர் மனைவி கல்யாணி(33), மகள் ரிதிஷா(8) மற்றும் உறவினர் ரவி(24) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்த சசிதர், அவரது மகன் பின்கா ராமச்சந்திரன்(11), பெங்களூருவில் வசிக்கும் துர்கா பிரசாத் மனைவி ஈஸ்வரி(62) ஆகியோர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போளூர் போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

படுகாயமடைந்தவர்களை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்துக்குள்ளான கார் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்து குறித்து போளூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x