Published : 05 May 2023 06:32 AM
Last Updated : 05 May 2023 06:32 AM

நன்னிலத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலை, கால சக்கரத்தை வீட்டில் பதுக்கி வைத்திருந்த தந்தை, மகன் கைது

திருவாரூர்: நன்னிலத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலை, செப்பு நாணயங்கள், காலச்சக்கரம் உள்ளிட்டவற்றை வீட்டில் பதுக்கி வைத்திருந்த தந்தை, மகனை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கடைத் தெருவில் உணவகம் நடத்திவருபவர் கண்ணன்(53). இவரது மகன் சூர்யப்பிரகாஷ் (23). இவர்கள் தங்களது வீட்டில் பல கோடிரூபாய் மதிப்புள்ள பழங்கால ஐம்பொன்சிலை மற்றும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான செப்பு நாணயங்களை பதுக்கி வைத்திருப்பதாக சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் இந்திரா, கும்பகோணம் குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளர் இலக்குமணன் ஆகியோர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீஸார் நேற்று அதிகாலை நன்னிலத்தில் உள்ள கண்ணன் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினர்.

அப்போது, ஆயிரம் ஆண்டுகள் பழமையான தன்வந்திரி ஐம்பொன்சிலை, ஒன்றேகால் அடி உயரமுள்ள ராக்காயி அம்மன் வெண்கல சிலை மற்றும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 750 கிராம் எடையுள்ள 2 செப்பு நாணயங்கள், ஒரு காலச் சக்கரம் ஆகியவற்றை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, சூரியபிரகாஷிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், மன்னார்குடி அருகேதிருமைக்கோட்டையில் அகஸ்தியர் கோயில் நிர்வாகியான மாரியப்பன் என்பவரிடமிருந்து இந்தசிலைகள் மற்றும் செப்பு நாணயங்களை வாங்கி விற்பதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என போலீஸார் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, கண்ணன், அவரது மகன் சூரிய பிரகாஷ் ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், இதில் தொடர்புடைய மாரியப்பன் உள்ளிட்ட சிலரிடம் விசாரணை நடத்தவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x