Published : 04 May 2023 04:05 AM
Last Updated : 04 May 2023 04:05 AM

கோவையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் பெண் வீட்டில் 100 பவுன் நகை, ரூ.2.50 கோடி திருடியதாக 3 பேர் கைது

கோவை: கோவையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் பெண் வீட்டில் 100 பவுன் நகை, ரூ.2.50 கோடி ரொக்கம் திருடப்பட்ட வழக்கில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கோவை புலியகுளம் சாலை, கிரீன் பீல்டு காலனியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி(63). ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். இவருக்கு சிங்காநல்லூரைச் சேர்ந்த வர்ஷினி என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. இதனால் வர்ஷினி அடிக்கடி ராஜேஸ்வரியின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி ராஜேஸ்வரி வீட்டுக்கு வர்ஷினி வந்திருந்தார். சிறிது நேரம் தூங்கி எழுந்த ராஜேஸ்வரி, தனது அறைக்குச் சென்று பார்த்தபோது, பீரோ திறந்து கிடந்தது. அதிலிருந்த 100 பவுன் நகை, ரூ.2.50 கோடி ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. வர்ஷினியையும் காணவில்லை.

இது தொடர்பாக, ராஜேஸ்வரி அளித்த புகாரில், வர்ஷினி, தனது கூட்டாளிகளான அருண்குமார், கார் ஓட்டுநர் நவீன்குமார் உள்ளிட்டோருடன் வந்து நகை, பணத்தை திருடிச் சென்றுவிட்டதாக கூறியிருந்தார். ராமநாதபுரம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இறுதியில், ராஜேஸ்வரியின் வீட்டில் நகை, பணத்தை திருடியதாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மேட்டுத்தெருவைச் சேர்ந்த அருண்குமார் (37), அவருக்கு உதவிய பிரவீன் (32), சுரேந்தர் (25) ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய வர்ஷினி, நவீன் குமார் உள்ளிட்ட மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

போலீஸார் கூறும்போது, ‘‘திருடிய தொகையில் இருந்து ரூ.33.20 லட்சம் மற்றும் 6 ஜோடி தங்க வளையல்களை வர்ஷினியிடம் இருந்து அருண் குமார் வாங்கி தன் நண்பர்களிடம் கொடுத்து வைத்திருந்தார். அதில், ரூ.31.20 லட்சம் சேலத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சோதனையின் போது பிடிபட்டுள்ளது. இதையடுத்து, அருண்குமாரிடம் இருந்து ரூ.2 லட்சம் ரொக்கம், 6 ஜோடி தங்க வளையல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x