Published : 22 Apr 2023 04:07 AM
Last Updated : 22 Apr 2023 04:07 AM

சென்னை ஐஐடி வளாகத்தில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை

சென்னை: சென்னை ஐஐடியில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் கேதர் சவுகுலே (20). இவர் சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் பிடெக் இரண்டாமாண்டு படித்து வந்தார். இதற்காக அவர், அங்குள்ள காவிரி விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில் கேதர் சவுகுலே, நேற்றுவகுப்புக்கு செல்லாமல் விடுதி அறையில் தனியாக இருந்தார்.

அவர், அறையில் தங்கியிருக்கும் பிற மாணவர்கள் வகுப்புக்கு வழக்கம்போல சென்றனர். இந்நிலையில் வகுப்புக்கு சென்ற அந்த மாணவர்கள், நண்பகல் அறைக்கு திரும்பி வந்தனர். அப்போதுஅறை உள்பக்கமாக பூட்டியிருந்ததால், அவர்கள் கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்கப்பட வில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள், ஜன்னல் வழியாக அறையை பார்த்தனர்.

அப்போது அங்கு கேதர் சவுகுலே தூக்கிட்ட நிலையில் இருந்ததைக் கண்டுஅதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள், ஐஐடி பணியாளர்களுடன் சேர்ந்து கதவை உடைத்து கேதர் சவுகுலேவை மீட்டனர். பின்னர் அவரை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் கேதர் சவுகுலே ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து விடுதி நிர்வாகம் தரப்பில் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, கோட்டூர்புரம் போலீஸார், விரைந்து சென்று கேதர் சவுகுலே சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, மாணவர் தற்கொலைக்கு காதல் விவகாரம், படிப்பு தகராறு, மன அழுத்தம் அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

முதல் கட்டமாக மாணவரின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு இது வரையில் சென்னை ஐஐடியில் படித்த 4 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x