Last Updated : 12 Apr, 2023 07:45 PM

 

Published : 12 Apr 2023 07:45 PM
Last Updated : 12 Apr 2023 07:45 PM

கும்பகோணம் | போலீஸார் கையை கடிக்க முயன்ற ரவுடிக்கு ஹெல்மெட் அணிவித்து நீதிமன்றத்தில் ஆஜர்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட ரவுடியை போலீஸார் பிடித்தபோது, கையைக் கடிக்க முயன்றதால் ரவுடிக்கு போலீஸார் ஹெல்மெட் அணிவித்து நீதிமன்றத்துக்கு அழைத்து வந்து ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கும்பகோணம் அருகே சாக்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தமிழரசன் (38). இவர் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதால் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு, சமீபத்தில் வெளியில் வந்துள்ளார். இந்நிலையில், குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், கொலை மிரட்டல், கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டதால் போலீஸார் வழக்குப் பதிவு தமிழரசனை தேடிவந்தனர். மேலும், கும்பகோணம் நீதிமன்றத்தில் 5 வழக்குகளில் தமிழரசன் மீது பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, நாச்சியார்கோவில் காவல் ஆய்வாளர் ரேகாராணி தலைமையில் போலீஸார் தமிழரசனை தேடிவந்தனர். இந்நிலையில், சாக்கோட்டையில் பதுங்கி இருந்த தமிழரசனை போலீஸார் நேற்று இரவு சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது திடீரென போலீஸாரின் கையை கடிக்க முயன்றுள்ளார். இருப்பினும் அவரை லாவகமாக பிடித்து, கைது செய்து, தமிழரசன் தலையில் ஹெல்மெட்டை மாட்டினர். ஏற்கெனவே பல வழக்குகளில் கைது செய்யப்பட்ட போது தமிழரசன் போலீஸாரை கடித்துள்ளதால், தற்போது போலீஸாரை கடிக்காமல் இருக்க ஹெல்மேட்டை தலையில் மாட்டினர்.

தொடர்ந்து இன்று தமிழரசனை கும்பகோணம் முதலாம் எண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதி உத்தரவின்படி திருச்சி மத்திய சிறையில் தமிழரசனை அடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x