Published : 11 Apr 2023 03:18 PM
Last Updated : 11 Apr 2023 03:18 PM

“நான் ராக்கி பாய்... ஏப்.30-ல் சல்மான் கான் கொல்லப்படுவார்” - மிரட்டல் குறித்து மும்பை போலீஸ் விசாரணை

சல்மான் கான் | கோப்புப்படம்

மும்பை: ‘பாலிவுட் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான சல்மான் கான் இந்த மாதம் 30-ம் தேதி கொல்லப்படுவார்' என்று அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மும்பை போலீஸார் கூறுகையில், "திங்கள்கிழமை (ஏப்.10) மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மிரட்டல் அழைப்பு வந்தது.பேசியவர் தான்னை ராக்கி பாய் என்றும், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வசிக்கும் தான் ஒரு பசுப் பாதுகாப்பாளர் என்றும் கூறிய அந்த நபர், இந்த மாதம் (ஏப்ரல்) 30-ம் தேதி பாலிவுட் நடிகர் சல்மான் கானை தான் கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார்" என்று போலீஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருவதாக அவர்கள் கூறினர்.

முன்னதாக, கடந்த மார்ச் 26-ம் தேதி, ராஜஸ்தன் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் லுனியைச் சேர்ந்த தாகட் ராம் என அடையாளம் காணப்பட்ட நபர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பியது தொடர்பாக கைது செய்யப்பட்டு மும்பை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். கைது செய்யப்பட்டவர, சல்மான் கானுக்கு, ‘சித்து மூஸ்வாலா போல கொல்லப்படுவாய்’ என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அவர் மீது பாந்த்ரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சல்மான் கானுக்கு மும்பை போலீஸார் ‘ஒய் ப்ளஸ்’ பாதுகாப்பு வழங்கியுள்ளனர். லாரன்ஸ் பிஷ்னோய் கேங்ஸ்டர் குழுவிலிருந்து சலமான் கானுக்கு மிரட்டல் கடிதம் வந்ததைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநில அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஏற்கெனவே லாரன்ஸ் பிஷ்னோய் கேங்ஸ்டர் குழுவைச் சேர்ந்த சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கோல்டி ப்ரார், ரோகிச் கார் ஆகியோர் மீது சல்மான் கானுக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியதற்காக, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 506(2), 120(b) மற்றும் 34-ன் கீழ் பாந்த்ரா போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சல்மான் கான் திங்கள்கிழமை மும்பையில் நடைபெற்ற விரைவில் வெளியாகவிருக்கும் அவரது படமான ‘கிஸி கா பாய் கிஸி கி ஜான்’ படத்திற்கான ப்ரமோஷன் விழாவில் கலந்து கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x