Published : 07 Apr 2023 06:28 PM
Last Updated : 07 Apr 2023 06:28 PM

கும்பகோணம்: இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவான குற்றவாளி கைது

கும்பகோணம்: கும்பகோணத்தில் 2019-ம் ஆண்டு டெல்லி இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் சாகும் வரை ஆயுள் தண்டனை பெற்று தலைமறைவாகியிருந்த குற்றவாளிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவரை போலீஸார் தேடி வருகின்றனர்

கும்பகோணம் வட்டம், அண்ணலக்கிரஹாரம், ராமச்சந்திரா தெருவைச் சேர்ந்த தெய்வநாயகம் மகன் செண்பகமுத்து (27). இவர் 3 நண்பர்களுடன், திருவிடைமருதூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பொதிகை நகரில், கடந்த 5-ம் தேதி இரவு மது அருந்திக்கொண்டிருக்கும்போது, இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள், செண்பகமுத்துவை பாட்டில் மற்றும் கற்களால் தாக்கி விட்டுத் தப்பியோடிவிட்டனர். இதனையறிந்த அருகிலுள்ளவர்கள், அவரை மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இது குறித்து தகவலறிந்த திருவிடைமருதூர் போலீஸார், அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, மோதிலால் தெருவைச் சேர்ந்த மூர்த்தி மகன் வசந்தகுமார் (30), அஞ்சுகம் நகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தினேஷ் (28) மற்றும் ஒருவர், தன்னை தாக்கியதாகப் புகாரளித்தார். புகாரின் பேரில் போலீஸார், வழக்கு பதிந்து, வசந்தகுமாரை கைது செய்து, தப்பியோடிய மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸார் கூறியது: “கடந்த 2019-ம் ஆண்டு கும்பகோணத்தில் நடந்த டெல்லி இளம்பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய, வசந்தகுமார், தினேஷ் உள்பட 4 பேருக்கு தஞ்சாவூர் மகிளா நீதிமன்றத்தில் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இவர்கள், இந்த தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், விசாரணை முடியும் வரை அவர்கள் சிறையிலிருந்து வெளியில் வந்திருந்தனர்.

இந்த வழக்கினை விசாரணை மேற்கொண்ட உயர் நீதிமன்றம், கடந்த மாதம் அந்த தீர்ப்பை உறுதி செய்த நிலையில், வசந்தகுமார் மற்றும் தினேஷ் ஆகிய 2 பேரும் தலைமறைவானார்கள். இந்நிலையில், செண்பகமுத்து அளித்த புகாரின் பேரில், வசந்தகுமார் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய தினேஷ் உள்பட 2 பேரைத் தேடி வருகின்றோம்” எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x