Published : 14 Mar 2023 07:13 PM
Last Updated : 14 Mar 2023 07:13 PM

செனனை கொள்ளை வழக்கில் ஒருவர் கைது: 37 சவரன் தங்க நகைகள், 42 கிலோ வெள்ளி மீட்பு

காவல் துறையினரால் மீட்கப்பட்ட தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள்

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் போட்டோ லேப் உரிமையாளர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 33 சவரன் தங்க நகைகள், 42 கிலோ பார் வெள்ளிக் கட்டிகள் உள்ளிட்ட பொருட்களை மீட்ட போலீஸார், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட முத்து என்பவரை கைது செய்துள்ளனர்.

சென்னை விருகம்பாக்கத்தில், போட்டோ லேப் உரிமையாளர் வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில், செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "சந்தோஷ்குமார் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் புலன் விசாரணை மேற்கொண்டோம். தங்க நகைகள், வெள்ளிக்கட்டிகள், வெள்ளிப் பாத்திரங்கள், வைர மோதிரம் மற்றும் கொஞ்சம் ரொக்கப்பணம் ஆகியவை காணாமல் போனதாக அவர் புகார் அளித்திருந்தார்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து, சந்தோஷ்குமாரின் குடும்பத்தினர் மற்றும் பலரிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்தி, கொள்ளை போன பொருட்களை மீட்டிருக்கிறோம். இந்த விசாரணையின்போது, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகள் உள்பட அனைத்துவிதமான தொழில்நுட்ப வடிவிலான ஆவணங்களையும் ஆய்வு செய்திருந்தோம்.

கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட முத்து

இதன்படி மேற்கொண்ட விசாரணையில், முத்து என்ற பழைய குற்றவாளி இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து, காணாமல் போன அனைத்து நகைகள், வெள்ளிப் பொருட்கள், வைர மோதிரம் உள்பட அனைத்தும் மீட்கப்பட்டுள்ளது. 37 சவரன் தங்க நகைகள், 41.5 கிலோ பார் வெள்ளிக் கட்டிகள், 16 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரம், 17 கிலோ வெள்ளிப் பாத்திரங்களை பறிமுதல் செய்துள்ளோம். காணாமல் போனதாக சொல்லப்பட்ட ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயில், ரூ.62 ஆயிரம் வரை மீட்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

முன்னதாக, சென்னை வடபழனியில் உள்ள குமரன் காலனியைச் சேர்ந்தவர் போட்டோ லேப் உரிமையாளர் சந்தோஷ்குமார். இவர் வெளியூர் சென்றுவிட்டு, கடந்த பிப்ரவரி 28ம் தேதி வீட்டிற்கு திரும்பியபோது, இவரது வீட்டின் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில் விருகம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிந்து குற்றவாளியை தேடி வந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x