Published : 13 Mar 2023 06:52 AM
Last Updated : 13 Mar 2023 06:52 AM

திருச்சி | தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் நடைபாதையில் தூங்கிய 3 யாசகர்கள் உயிரிழப்பு: ஸ்ரீரங்கத்தில் இளைஞர் கைது

திருச்சி: ஸ்ரீரங்கத்தில் தாறுமாறாக ஓடியகார், நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியதில் 3 யாசகர்கள் உயிரிழந்தனர்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களிடம் யாசகம்பெற்று வாழ்க்கை நடத்துவதற்காக தமிழகம் மட்டுமின்றி ஆந்திராஉள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் ஸ்ரீரங்கம் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகள், சாலையோரங்களில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் அம்மா மண்டபத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் சாலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 100-க்கும் மேற்பட்ட யாசகர்கள் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். இரவு சுமார் 11 மணியளவில் அவ்வழியாக வேகமாக வந்த ஒரு கார், ஸ்ரீயோக திருமண மண்டபம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த யாசகர்கள் மீது ஏறியதுடன், அங்கிருந்த மின் கம்பம், சாலைத் தடுப்பு மீது மோதியது.

இந்த விபத்தில் பெயர், முகவரி தெரியாத 70 வயதுடைய யாசகர் அந்த இடத்திலேயே இறந்தார். மேலும், படுகாயமடைந்த 2 பேரை(58 மற்றும் 60 வயது மதிக்கத்தக்கவர்கள்) அப்பகுதி மக்கள்மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதற்கிடையே, விபத்து ஏற்படுத்திய காரின் டயர்கள் பஞ்சராகிய நிலையில், சுமார் அரை கி.மீ தொலைவுக்குச் சென்று ஒரு சந்து பகுதியில் நின்றபோது, அதிலிருந்த 2 பேரையும் பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கினர். காரையும் தாக்கினர். ரங்கம் போலீஸார் அங்குசென்று காரிலிருந்த 2 பேரையும் மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அதில், அவர்கள் காந்தி மார்க்கெட் பகுதியிலுள்ள கீழரணை தெருவைச் சேர்ந்த கண்ணன் மகன் லட்சுமி நாராயணன் (23), அவரது நண்பரான அஸ்வந்த் (21) என்பதும், அஸ்வந்துக்கு, லட்சுமி நாராயணன் கார் ஓட்ட கற்றுக் கொடுக்க அழைத்து வந்தபோது விபத்து நேரிட்டதும் தெரியவந்தது.

இதுகுறித்து போக்குவரத்து வடக்கு புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டிய லட்சுமி நாராயணனை கைது செய்தனர். அஸ்வந்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, இறந்த யாசகர்கள் 3 பேரின் புகைப்படங்களை இதர மாவட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி, அவர்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x