Published : 10 Mar 2023 06:00 AM
Last Updated : 10 Mar 2023 06:00 AM

வேலூர் | குடியாத்தத்தில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை நில அளவையர் உட்பட 2 பேர் கைது

ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைதான விஜய கிருஷ்ணன், அவரது உதவியாளர் கலைவாணன்.

வேலூர்: குடியாத்தத்தில் விவசாய நிலத்துக்கு நில வரைபடம் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை நில அளவையர் உட்பட இரண்டு பேரை லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த டி.பி.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு (66). இவர், அதே கிராமத்தில் 1.33 ஏக்கர் நிலத்தை கடந்தாண்டு வாங்கியுள்ளார்.

அந்த நிலத்தை அளவீடு செய்து வரைபடம் வழங்க இ-சேவை மையத்தில் சில நாட்களுக்கு முன்பு விண்ணப்பித்துள்ளார். அவரது மனுவின் மீது குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலக துணை நில அளவையர் விஜய கிருஷ்ணன் (47) ஆய்வு செய்த துடன், வேலுவின் நிலத்தையும் அளவீடு செய்து முடித்துள்ளார்.

ஆனால், நில வரைபடம் வழங்க காலம் கடத்தி வந்துள்ளார். தொடர்ந்து பலமுறை நேரில் சென்று கேட்டபோது ரூ.15 ஆயிரம் பணம் கொடுத்தால் மட்டுமே வரைபடம் வழங்குவதாக விஜய கிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஆனால், பணத்தை கொடுக்க விரும்பாத வேலு, வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார். அவரிடம் ரூ.15 ஆயிரத்துக்கான ரூபாய் நோட்டுகளில் ரசாயனம் தடவி கொடுத்தனுப்பினர்.

அந்தப் பணத்தை குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த விஜய கிருஷ்ணன் நேற்று வாங்கி அருகில் இருந்த உதவியாளர் கலைவாணன் (27) என்பவரிடம் கொடுத்துள்ளார். அப்போது, லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் விஜய் தலைமையிலான காவலர்கள், விஜய கிருஷ்ணன், கலைவாணன் ஆகியோரை கைது செய்தனர்.

பின்னர், விஜய கிருஷ்ணனின் சட்டை, பேண்ட் பாக்கெட்டுகளில் சோதனை செய்ததில் சுமார் ரூ.25 ஆயிரம் பணமும், கலை வாணனிடம் இருந்து ரூ.20 ஆயிரம் பணமும் பறிமுதல் செய்தனர். இதில், கலைவாணனிடம் இருந்தது லஞ்சப் பணம் என்றும், விஜய கிருஷ்ணனிடம் இருந்த பணம் சொந்தப் பணம் என கூறியதால் அதற்குரிய ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளனர்.

விஜய கிருஷ்ணன் கடந்த 2017-ம் ஆண்டு முதல் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை நில அளவையராக பணியாற்றி வருகிறார். கலைவாணன் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர்.

கடந்த ஓராண்டாக அவரை லஞ்சம் வாங்குவதற்காகவே தனது உதவியாளராக விஜய கிருஷ்ணன் தனிப்பட்ட முறையில் நியமித்து மாத சம்பளம் கொடுத்து வருவது தெரியவந்தது.

அவரைப் போலவே மேலும் இரண்டு பேரை விஜய கிருஷ்ணன் தனிப்பட்ட முறையில் வேலைக்கு வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இருவரிடமும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும், பள்ளிகொண்டாவில் உள்ள விஜய கிருஷ்ணனின் வீட்டிலும் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x