Published : 14 Feb 2023 07:02 AM
Last Updated : 14 Feb 2023 07:02 AM

தாம்பரம் | மீன் வியாபாரி கொலை; மர்ம கும்பலுக்கு வலை: மனைவி படுகாயத்துடன் சிகிச்சை

தாம்பரம்: தாம்பரம் அருகே மீன் வியாபாரி மற்றும் அவரது மனைவியை 5 பேர்

கொண்ட மர்ம கும்பல் வெட்டியது. இதில் மீன் வியாபாரி அதே இடத்திலேயே இறந்தார். அவரது மனைவி படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காரில் வந்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம், கே.கே.நகர், மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் (52). இவருடைய மனைவி ஜனகா இருவரும் சேர்ந்து வண்டலூர் அடுத்த ஓட்டேரி அரசு மேல் நிலைப்பள்ளி அருகே மீன் கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை காரில் வந்த 5 பேர் கொண்ட மர்ம நபர்கள், கத்தியால் பார்த்திபன் மற்றும் ஜனகா ஆகியோரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.

இதில் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜனகா படுகாயமடைந்தார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜனகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஓட்டேரி போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பார்த்திபனின் 15 வயது மகளுக்கு மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் பிரேம்குமார் செல்போன் மூலம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும் இதனால் கடந்த டிசம்பர் மாதம் பார்த்திபனின் மகள், பிரேம்குமாரை தனது ஆண் நண்பருடன் சேர்ந்து திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் வைத்து கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு பழி தீர்க்கும் வகையில் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x