Published : 01 Jan 2023 04:11 PM
Last Updated : 01 Jan 2023 04:11 PM

வேலூர் மாவட்டத்தில் விபத்துகளில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு: எஸ்.பி. அதிர்ச்சி தகவல்

வேலூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ராஜேஷ் கண்ணன். அருகில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் பாஸ்கரன், குணசேகரன் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 2021-ம் ஆண்டு விபத்துகளில் 238 பேர் உயிரிழந்த நிலையில், கடந்தாண்டு 268 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் விபத்துகளில் உயிரிழப்பை குறைக்க விஐடி போக்குவரத்து மேலாண்மை பிரிவுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக எஸ்.பி., ராஜேஷ் கண்ணன் தெரிவித் துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு காவல் துறை செயல்பாடுகள் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் 2021-ம் ஆண்டு 25 கொலைகள் நடைபெற்ற நிலையில், 2022-ம் ஆண்டில் 24 கொலைகள் நடைபெற்றுள்ளன. இதில், ரவுடிகள் இடையிலான கொலைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2021-ல் 275 குற்ற வழக்குகளில் ரூ.10 கோடியே 77 லட்சத்து 98 ஆயிரத்து 183 மதிப்புள்ள பொருட்கள் களவு போயின. 2022-ல் ரூ.2 கோடியே 76 லட்சத்து 25 ஆயிரத்து 150 மதிப்புள்ள பொருட்கள் களவுபோன நிலையில், ரூ.1 கோடியே 71 லட்சத்து 27 ஆயிரத்து 352 மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. களவு பொருட்கள் பறிமுதல் செய் ததில் 75 சதவீதம் ஆகும். 2021-ல் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை வழக்கால் களவு பொருட்களின் மதிப்பு அதிகரித்தது.

வேலூர் மாவட்டத்தில் போக்சோ சட்டத்தில் கைது நடவடிக்கை அதிகரித்துள்ளது. போக்சோ சட்டத்தில் 2021-ல் 49 வழக்குகளும், 2020-ல் 66 வழக்குகளும் பதிவாகியுள்ளன. 2021-ல் குண்டர் சட்டத்தில் 103 பேர் கைதான நிலையில், 2022-ல் 114 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், கஞ்சா மற்றும் குட்கா வழக்குகளில் மட்டும் 28 பேர் கைதாகியுள்ளனர். காணாமல் போனவர்கள் 2021-ல் 415 பேர், 2022-ல் 466 பேர் ஆகும். 2022-ல் காணாமல் போனவர்களில் 392 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மணல் கடத்தல் தொடர்பாக 2021-ல் 275 வழக்குகளில் 282 பேர் கைது செய்யப் பட்டு, 328 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 2022-ல் 308 வழக்குகளில் 317 பேர் கைதாகி 536 வாகனங்கள் பறி முதல் செய்யப்பட்டுள்ளன. சாராய வழக்குகளில் 2022-ல் மட்டும் 44 ஆயிரத்து 804 லிட்டர் சாராயம், 2.08 லட்சம் லிட்டர் ஊறல் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. 300 வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.

மாவட்டத்தில் தடை செய்யப் பட்ட குட்காவை பொறுத்தவரை 2021-ல் 10,932 கிலோ, 2022-ல் 12,789 கிலோவுடன் 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 66 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. கஞ்சா வழக்குகளில் 2021-ல் 21 கிலோ மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது. 2022-ல் ஆபரேஷன் கஞ்சா-1, 2,3 என தொடர் நடவடிக்கையால் 142 வழக்குகளில் 331 கிலோ, 25 வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டு 27 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து ள்ளன. 2021-ல் விபத்துகளில் 238 பேர் உயிரிழந்த நிலையில், 2022-ல் 268 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துகளை குறைக்க விஐடி போக்குவரத்து மேலாண்மை துறை சார்பில் ஆய்வுகள் நடத்தப் பட்டு, 51 விபத்து ஏற்படும் பகுதிகளில் விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

வேலூர் மாநகரில் போக்கு வரத்து விதி மீறல்களை கண்காணித்து அபராதம் விதிக்கும் இ-சலான் நடைமுறை விரைவில் அமலாக உள்ளது. மாவட்டத்தில் இ-பீட் நடைமுறை 51-ஆக விரிவு படுத்தப்பட்டுள்ளது. வேலூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் ஐ.ஐ.டி., குழு பரிந்துரையை அமல்படுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உரிய அனுமதி பெற்றுள்ளது.

மோட்டார் வாகன வழக்குகள் மூலம் ரூ.4 கோடியே 7 லட்சத்து 17 ஆயிரத்து 700 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மாவட்ட சைபர் குற்றப்பிரிவு மூலம் 2022-ம் ஆண்டில் 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 17 பேரின் வங்கி கணக்குகள் முடக் கப்பட்டுள்ளன’’ என்றார். அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் பாஸ்கரன், குணசேகரன், காட்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் பழனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x