ஓசூரில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி 16 பவுன் நகை கொள்ளை

ஓசூரில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி 16 பவுன் நகை கொள்ளை
Updated on
1 min read

ஓசூர்: ஓசூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மார்ட்டின் ராஜா (48). இவர் பத்தலப்பள்ளியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி பாஸ்கல் ஜோஸ்வினா (45). இவரது மகன் நோயல் கிங்ஸ்லீ (20) மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

மார்ட்டின் ராஜா, தனது மகனுடன் புத்தாண்டுக்கு பொருட்கள் வாங்க நேற்று முன்தினம் மாலை கடைக்கு சென்றார். வீட்டில் பாஸ்கல் ஜோஸ்வினா, மாமியார் லார்துமேரி, மாமனார் மற்றும் 2 பெண் குழந்தைகள் இருந்தனர். இரவு 7.30 மணி அளவில் அவரது வீட்டுக்குள் நுழைந்த 25 வயது மதிக்கதக்க 3 பேர் வீட்டின் கதவை உள்புறமாக தாழிட்டனர். பின்னர் சத்தம் வெளியே கேட்காமல் இருக்க டிவியின் சத்தத்தை அதிகப்படுத்தினர்.

பின்னர், பாஸ்கல் ஜோஸ்லினா, லார்துமேரி மற்றும் 2 மகள் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவர்கள் அணிந்திருந்த நகைகள் மற்றும் பீரோவில் இருந்த நகை என மொத்தம் 16 பவுன் நகையை கொள்ளையடித்துக் கொண்டு வீட்டின் வெளியே வந்தனர். அப்போது, மார்ட்டின் ராஜா, தனது மகனுடன் வீட்டுக்கு வந்தார். வெளியே வந்த 3 பேரிடம் அவர் விசாரித்தபோது, இரும்பு கம்பியால் அவரை கடுமையாக தாக்கிவிட்டு அவர்கள் தப்பியோடினர்.

இதில், படுகாயம் அடைந்த மார்ட்டின் ராஜா, ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக ஓசூர் அட்கோ போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in