சங்ககிரியில் நின்ற ஆம்னி பேருந்தில் ரூ.46 லட்சம் கொள்ளை: கும்பலைப் பிடிக்க தனிப்படை தீவிரம்

சங்ககிரியில் நின்ற ஆம்னி பேருந்தில் ரூ.46 லட்சம் கொள்ளை: கும்பலைப் பிடிக்க தனிப்படை தீவிரம்
Updated on
1 min read

சேலம்: சேலம் அருகே சங்ககிரியில் நின்ற ஆம்னி பேருந்தில் ரூ.46 லட்சம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ஜோதிமணி. இவரது மகன் விஜயகுமார் (28). இவர்கள் இருவரும் திருப்பூரில் ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகின்றனர். அங்கிருந்து ஆந்திர மாநிலம் ஐதராபாத், விஜயவாடா பகுதிக்கு கடந்த 3 நாட்களுக்கு முன் சென்ற ஜோதிமணி, ஜவுளிகளை விற்பனை செய்து கடைகளில் இருந்து பணத்தை பெற்றுள்ளார். பின்னர், மகன் விஜயகுமாரை வரவழைத்து ரூ.46 லட்சம் ரொக்கத்தை பேகில் போட்டு, ஹைதராபாத்தில் இருந்து கோவை செல்லும் ஆம்னி பேருந்தில் அனுப்பி வைத்தார்.

ஹைதராபாத்தில் இருந்து கோவைக்கு சென்ற தனியார் ஆம்னி பேருந்து கடந்த 22-ம் தேதி காலை சேலம் அருகே உள்ள சங்ககிரி, வைகுந்தம் சுங்கச்சாவடி பகுதியில் உள்ள தாபா ஓட்டல் அருகே ஓட்டுனர் நிறுத்தினார். பயணிகள் சாப்பிட இறங்கியதும், விஜயகுமாரும் பேருந்தில் இருந்து இறங்கி தாபா ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டு விட்டு 10 நிமிடத்தில் மீண்டும் பேருந்துக்கு திரும்பினார்.

அப்போது, அவரது பை காணாமல் போயிருந்தது. பேருந்தில் ஏறி மர்ம நபர்கள் ரூ.46 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதை அறிந்து விஜயகுமார் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து விஜயகுமார், சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடம் வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். ஆம்னி பேருந்து சுங்கச்சாவடியை கடந்து வந்ததும், அதனை பின் தொடர்ந்து வந்த வாகனங்கள், சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. அந்தப் பதிவுகளை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in