மூன்று மகன்களும் பராமரிக்கத் தவறினார்களா?- மதுரையில் வயதான தம்பதி தூக்கிட்டு தற்கொலை 

மூன்று மகன்களும் பராமரிக்கத் தவறினார்களா?- மதுரையில் வயதான தம்பதி தூக்கிட்டு தற்கொலை 

Published on

மதுரையில் வயதான தம்பதியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். மூன்று மகன்கள் இருந்தும், பராமரிக்கத் தவறியதால் இறந்தனரா என போலீஸார் விசாரிக்கின்றனர்.

மதுரை அருகிலுள்ள சமயநல்லூர் பூங்காநகரைச் சேர்ந்தவர் மச்சக்காளை (67). இவரது மனைவி பசுபதி (60). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். ஒருவர் சமயநல்லூர் ஊராட்சியில் ஊழியராக வேலை பார்க்கிறார். மற்ற இருவரும் தனியாரில் பணி புரிகின்றனர்.

மூத்த மகன் வீட்டின் தரைத்தளத்தில் மச்சக்காளை, பசுபதி தம்பதியர் வசித்தனர். இநிலையில், இன்று அதிகாலை 5.30 மணிக்கு இருவரும் எழுந்து பல் துலக்கியுள்ளனர். அதன்பின், அவர்கள் வெளியில் வரவில்லை.

சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் காலை 8 மணிக்கு மேல் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, இருவரும் ஒரே அறையில் அடுத்தடுத்து தூக்கில் பிணமாக தொங்கியது தெரிந்தது.

இது தொடர்பாக தகவல் அறிந்த சமயநல்லூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். தம்பதியரின் உடல்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

முதல்கட்ட விசாரணையில், தனியார் மில் தொழிலாளியான மச்சக்காளை, பசுபதி கரோனாவால் வீட்டை வெளியேறாமல் முடங்கி இருந்துள்ளனர். மகன்களும் சரியாக பராமரிக்கத் தவறிய சூழலில் விரக்தி அடைந்து தம்பதியர் தற்கொலை செய்திருக்கலாம் என,தெரிகிறது. இருப்பினும், வேறு காரணம் இருக்குமா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரிக்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in