Published : 09 Aug 2019 12:31 PM
Last Updated : 09 Aug 2019 12:31 PM
சென்னையில் ஆண்டுதோறும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி கோட்டையில் முதல்வர் கொடியேற்றுவார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கும். நிகழ்ச்சி நடப்பதை ஒட்டியும், அதற்குமுன் ஒத்திகை நிகழ்ச்சிக்காகவும் சென்னை கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
''10.08.2019 (சனிக்கிழமை) மற்றும் 13.08.2019 (செவ்வாய்க்கிழமை) ஆகிய தேதிகளில் நடைபெறும் சுதந்திர தின விழா நிகழ்ச்சியின் ஒத்திகை மற்றும் சுதந்திர தின விழா நிகழ்வு 15.08.2019-ம் தேதி ஆகிய நாட்களில் சென்னை கோட்டையில் நடைபெறுவதை முன்னிட்டு வருகிற 08, 10 மற்றும் 13.08.2019 ஆகிய தேதிகளில் சுதந்திர தின விழாவின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு ஒத்திகை நடைபெறும் மூன்று தினங்களிலும் காலை 06.30 மணி முதல் ஒத்திகை முடியும் வரை கீழ்க்கண்ட சாலைகளில் தற்போது நடைமுறையில் உள்ள போக்குவரத்து, மாற்றியமைக்கப்பட உள்ளது.
உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவுச்சின்னம் வரை அமையப் பெற்றுள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னத்தில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை அமையப்பெற்றுள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமர சாலை ஆகிய சாலைகளில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.
காமராஜர் சாலையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் வாலாஜா சாலை, அண்ணாசாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road) வழியாக பாரிமுனையை வந்தடையலாம்.
பாரிமுனையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக காமராஜர் சாலை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும், வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road), ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை வந்தடையலாம்.
அண்ணாசாலையில் இருந்து கொடிமர சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road) வழியாக பாரிமுனையைச் சென்றடையலாம்.
முத்துசாமி சாலையில் இருந்து கொடிமரசாலை வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையைச் சென்றடையலாம்.
வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’’.
இவ்வாறு போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment