Published : 24 Jul 2019 07:42 AM
Last Updated : 24 Jul 2019 07:42 AM

உணவு விநியோக ஊழியரை தாக்கி போன், பணம் பறித்தவர் கைது

சென்னை

உணவு விநியோக ஊழியரை தாக்கி வழிப்பறி செய்த கொள்ளையன் போலீஸாரின் வாகன சோதனை யில் சிக்கியுள்ளார். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.

பழைய வண்ணாரப்பேட்டை யைச் சேர்ந்தவர் துளசிராமன் (33). ஆன்லைன் ஆர்டரின்பேரில் உணவு விநியோகிக்கும் தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். கடந்த 21-ம் தேதி காசிமேடு பகுதியில் இரவு 11 மணியளவில் நின்றிருந்தபோது அங்கு வந்த இளைஞர்கள் 2 பேர் கத்தியால் தாக்கிவிட்டு துளசிராமனின் செல்போன் மற்றும் பணத்தை பறித்து தப்பினர்.

இதுகுறித்து காசிமேடு காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர். மறுநாள் மதியம் 12 மணியளவில் வண்ணாரப்பேட்டை காவல் நிலைய போலீஸார் அதே பகுதி மொட்டைத் தோட்டம் 10-வது தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரே பைக்கில் வந்த இளைஞர்கள் 2 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, திடீரென பைக்கில் வந்த இளைஞர்கள் ஓட்டம் பிடித்தனர். அவர்களில் ஒருவரை போலீஸார் விரட்டிப் பிடித்தனர்.

இதில், பிடிபட்ட இளைஞர் புதுவண்ணாரப்பேட்டை தங்கம்மாள் தெருவைச் சேர்ந்த லோகேஷ் என்ற பல்லு லோகேஷ் (24) என்பது தெரியவந்தது. தப்பியது அவரது நண்பர் குள்ளக் கார்த்தி என்பது தெரியவந்தது. லோகேஷை கைது செய்த போலீஸார் தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x